அனல் பறந்து வந்த ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியன் குஜராத்தை அதன் சொந்த ஊரான அகமதாபாத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி என்ற மும்பையின் ஆல் டைம் சாதனையை சமன் செய்தது. மழையால் ரிசர்வ் நாளில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்களில் 214 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் அபாரமாக செயல்பட்டு 96 (47) ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
அதை தொடர்ந்து மழையால் 15 ஓவரில் 171 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கை துரத்திய சென்னைக்கு ருதுராஜ் கைக்வாட் 26 (16) ரன்களும் டேவோன் கான்வே 47 (25) ரன்களும் எடுக்க மிடில் ஆர்டரில் சிவம் துபே 32* (21) ரகானே 27 (13) ராயுடு 19 (8) என முக்கிய பேட்ஸ்மேன்கள் முக்கியமான அதிரடியான ரன்களை எடுத்து வெற்றிக்கு போராடினர். இருப்பினும் கடைசி நேரத்தில் மோகித் சர்மா துல்லியமாக செயல்பட்டதால் கடைசி 2 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட சென்னைக்கு சிக்சரையும் பவுண்டரியும் விளாசிய ரவீந்திர ஜடேஜா 15* (9) ரன்கள் எடுத்து சூப்பர் ஃஃபினிசிங் கொடுத்தார்.
அலைய விட்ட தோனி:
அதனால் மோஹித் சர்மா 3 விக்கெட்களை எடுத்தும் கோப்பையை தக்க வைக்கும் வாய்ப்பை குஜராத் நழுவ விட்டது. முன்னதாக இந்த போட்டியில் உச்சகட்ட பார்மில் இருப்பதால் வெளுத்து வாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் வழக்கம் போல அதிரடியை துவங்கிய போது ஆரம்பத்திலேயே கொடுத்த கேட்சை தீபக் சஹர் தவற விட்டது ரசிகர்களை கடுப்பேற்றியது. அதனால் கடந்த போட்டியில் மும்பையை தெறிக்க விட்டதை போல் புரட்டி எடுக்க துவங்கிய அவரை நல்ல வேளையாக 39 (20) ரன்களிலேயே ரவீந்திர ஜடேஜாவின் மாயாஜால சுழலில் தோனி கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்ததால் சென்னை ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.
மேலும் இளம் வீரர்களைக் கொண்ட சென்னை அணியின் பவுலிங் கூட்டணியில் பொறுப்புடன் சிறப்பாக செயல்பட வேண்டிய அவர் 4 ஓவரில் 38 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டை எடுத்து ஓரளவு மட்டுமே அசத்தினார். அந்த நிலையில் போட்டியின் முடிவில் வழக்கம் போல நிறைய இளம் வீரர்கள் தோனியை சந்தித்து ஆட்டோகிராப் வாங்கினர். அந்த வகையில் அவரிடம் சென்ற தீபக் சஹர் தம்முடைய ஜெர்சியில் நெஞ்சில் ஆட்டோகிராப் போடுமாறு கேட்டுக்கொண்டார். அப்போது “இந்த போட்டியில் முக்கியமான கேட்சை விட்ட உனக்கு ஆட்டோகிராப் போட முடியாது பேசாம போ” என்று ஜாலியாக சொன்ன தோனி செல்லமாக கோபித்துக் கொண்டார்.
அத்துடன் அருகில் இருந்த ராஜிவ் சுக்லாவிடம் “கைக்கு வந்த எளிதான கேட்ச்சை விட்ட இவர வச்சுக்கிட்டு என்ன தான் செய்வது” என்ற வகையில் தோனி அதிருப்தியாக பேசினார். அப்போது மீண்டும் தீபக் சஹர் கேட்டதை தொடர்ந்து தோனி அவருடைய நெஞ்சில் ஆட்டோகிராப் போட்டதால் மகிழ்ச்சியுடன் அவர் அங்கிருந்து சென்றார். இந்த சீசனில் தீபக் சஹருடன் இப்படி தோனி நடந்து கொள்வது புதிதல்ல. ஏனெனில் ஏற்கனவே ஒரு போட்டியில் பெவிலியினில் அமர்ந்திருந்த அவரை பேட்டிங் பயிற்சி செய்வது போல் முகத்துக்கு நேராக பேட்டை கொண்டு சென்ற தோனி பயத்தை காட்டினார்.
Deepak Chahar Asking Autograph
Dhoni ~ Catch Pudikkave Mattenra Unnakku Yethukku da Autograph 😂❤️#IPL2023Final #CSK #LEO pic.twitter.com/wCVYuZW430
— Sadiq Basha (@SadiqBasha_) May 30, 2023
அப்போது 14 கோடியை வாங்கிக்கொண்டு பெஞ்சில் அமர்ந்திருப்பதற்காக தோனி அவ்வாறு செய்ததாக ரசிகர்கள் கலாய்த்தனர். அதே போல் கடந்த சில போட்டிகளுக்கு முன்பாக நடந்து வந்த தோனி சட்டென தீபக் சஹார் முகத்தில் அடிப்பது போல் செய்து பயத்தை காட்டியதும் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வரிசையில் தமக்கு மிகவும் நெருங்கிய அவருடன் தோனி மீண்டும் இப்படி நடந்து கொண்டுள்ளது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இதையும் படிங்க:என்னது தோனி கடைசி 2 பந்தை பாக்காம குனிந்து இருந்தாரா? உண்மை என்ன தெரியுமா? – வெளியான வீடியோ ஆதாரம் இதோ
இது மட்டுமல்லாமல் கோப்பையை வென்ற பின் ஹோட்டல் அறைக்கு வெளியே ரசிகர்கள் கட்டிய மேளத்திற்கு தனது மனைவியை அருகில் வைத்துக் கொண்டே தீபக் சஹார் நடனமாடிய வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.