TNPL 2022 : டிகே டிகே என முழங்கிய ரசிகர்கள், கோபத்தில் சண்டையில் ஈடுபட்ட முரளி விஜய் – பரபர வீடியோ

Dinesh karthik Murali Vijay
- Advertisement -

தமிழகத்தின் இளம் வீரர்களை கண்டறியும் பிரபல உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6-வது சீசன் கடந்த ஜூன் 23 முதல் திருநெல்வேலி, கோயம்புத்தூர், திண்டுக்கல், சேலம் ஆகிய நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 1 முறை மோத வேண்டும் என்பதன் அடிப்படையில் 28 போட்டிகள் கொண்ட லீக் சுற்று விறுவிறுப்பான போட்டிகளுக்கு பின் நிறைவு பெற்றுள்ளது. அதில் நெல்லை, நடப்புச் சாம்பியன் சேப்பாக்கம், மதுரை மற்றும் கோவை ஆகிய 4 அணிகள் முறையே 6, 5, 5, 4 வெற்றிகளைப் பெற்று புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

முன்னதாக இந்த தொடரில் தமிழகத்தின் மூத்த நட்சத்திர வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இந்தியாவுக்காக விளையாடிய பின்பு தாயகம் திரும்பியதும் திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய அணிகளுக்காக இந்த தொடரில் விளையாடினார்கள். மேலும் மற்றொரு தமிழக நட்சத்திர மூத்த வீரர் முரளி விஜய் சமீப காலங்களில் பிரேக் எடுத்திருந்த நிலையில் இந்த தொடரின் வாயிலாக கம்பேக் கொடுத்து ஆரம்பம் முதலே திருச்சி வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அதிலும் நெல்லை அணிக்கு எதிராக தனி ஒருவனாக சதமடித்து போராடிய அவர் இந்த தொடரில் 224 ரன்களை குவித்து சிறப்பாக செயல்பட்ட போதிலும் அவரது அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

- Advertisement -

டிகேடிகே முழக்கம்:
இந்த நிலைமையில் சமீபத்தில் திருச்சி அணிக்காக ஒரு போட்டியில் விளையாடி கொண்டிருந்த முரளி விஜய் பவுண்டரி எல்லை அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னே மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்களின் ஒரு பகுதியினர் சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் அட்டகாசமாக செயல்பட்டு 3 வருடங்கள் கழித்து இந்திய அணிக்குள் அபாரமான கம்பேக் கொடுத்த தினேஷ் கார்த்திக்கின் பெயரை “டிகே டிகே” என முரளி விஜயின் காதில் விழும் வகையில் முழங்கினர்.

அதை கவனித்த முரளிவிஜய் என்னப்பா இதெல்லாம் என்ற வகையில் அந்த முழக்கத்தை நிறுத்துமாறு லேசான புன்னகையுடன் சைகை செய்தார். ஆனால் அதற்கு செவிசாய்க்காத ரசிக பட்டாளம் முன்பைவிட விண்ணதிர முழங்கியதால் கடுப்பான முரளி விஜய் கோபமடைந்தார். ஆனாலும் அஞ்சாத ரசிகர்கள் மீண்டும் மீண்டும் தினேஷ் கார்த்திக் பெயரை முழங்கியதால் ஒரு கட்டத்தில் கோபமடைந்த முரளி விஜய் மைதானத்திற்கும் ரசிகர்களுக்கும் இடையே வைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரை தாண்டி குதித்து சென்று வம்பிழுக்கும் வகையில் நடந்து கொண்ட ரசிகர்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

- Advertisement -

நட்பும் துரோகமும்:
அதை கவனித்த மைதான பராமரிப்பு பாதுகாவலர்கள் உடனடியாக வாக்குவாதம் பெரிய அளவில் முற்றுவதற்கு முன்பாக அங்கே சென்று அவரை சமாதானப்படுத்தி மைதானத்துக்குள் அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வு எதற்காக நடைபெற்றது என்று தமிழக ரசிகர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. தமிழகத்திற்காக உள்ளூர் கிரிக்கெட்டில் தினேஷ் கார்த்திக் மற்றும் முரளி விஜய் ஆகியோர் நண்பர்களாக ஒன்றாக இணைந்து விளையாடி வந்த நிலையில் தினேஷ் கார்த்திக்கின் மனைவி நிகிதா வஞ்சாராவுடன் அவருக்கு தெரியாமலேயே முரளி விஜய் காதல் தொடர்பு வைத்திருந்தார்.

ஒரு கட்டத்தில் அது தினேஷ் கார்த்திக்கு தெரியவந்ததால் மனமுடைந்த அவர் உடனடியாக விவாகரத்து செய்தார். அதன்பின் நிக்கிதா வஞ்சரா முரளி விஜய்யை மணந்து கொண்டார். இருப்பினும் நல்ல மனம் கொண்ட தினேஷ் கார்த்திக்கு நாளடைவில் முதல் மனைவியை விட நல்ல குணம் கொண்ட பேட்மிட்டன் வீராங்கனை தீபிகா பல்லிகல் மனைவியாக கிடைத்தார். தற்போது அவருடன் திருமணம் செய்துகொண்டுள்ள தினேஷ் கார்த்தி குழந்தைகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் இந்தியாவுக்காகவும் விளையாடும் அளவுக்கு சிறப்பாக வாழ்ந்து வருகிறார்.

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டில் அவரால் 24 பந்துகளில் 24 விக்கெட்டுகள் எடுக்க முடியும் – ஷதாப் கான் புகழாரம்

மறக்காத ரசிகர்கள்:
பழையவற்றை மறந்து புதிய வாழ்க்கையை தினேஷ் கார்த்திக் வாழ்ந்து வந்தாலும் நட்புக்கு இலக்கணமாக திகழாமல் துரோகம் செய்தது போல் நடந்து கொண்ட முரளி விஜய் செய்த செயலை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை. அதனாலேயே இப்படி நேரடியாக அவருக்கு எதிராகவும் தினேஷ் கார்த்திக்கு தங்களின் ஆதரவையும் தெரிவித்து ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement