
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் மிகச் சிறந்த துவக்க வீரராக போற்றப்படுகிறார். தம்முடைய காலங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஓப்பனிங்கில் எதிரணிகளை பந்தாடிய அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். 2015ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற அவர் அவ்வப்போது பயிற்சியாளராகவும் வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
குறிப்பாக பஞ்சாப் ஐபிஎல் அணியில் 2016 – 2018 காலகட்டங்களில் சேவாக் இயக்குனராக செயல்பட்டார். அதற்கிடையே 2017ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு சேவாக் விண்ணப்பம் செய்திருந்தார். இருப்பினும் அப்போது பிசிசிஐ ஆலோசனை கமிட்டி ரவி சாஸ்திரியை பரிந்துரைத்ததால் சேவாக் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்படவில்லை.
அதன் பின் 7 வருடங்கள் கடந்தும் மேற்கொண்டு அவர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை. இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் வருங்காலத்தில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பீர்களா என்று வீரேந்திர சேவாக்கிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஐபிஎல் போல இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட விரும்பவில்லை என்று சேவாக் கூறியுள்ளார்.
அதற்கான காரணம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியின் பயிற்சியாளராக விண்ணப்பிக்க மாட்டேன் என்று நினைக்கிறேன். ஆனால் ஐபிஎல் தொடரில் ஏதேனும் வாய்ப்பு வந்தால் அதை கண்டிப்பாக நான் பார்ப்பேன். ஏனெனில் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றால் கடந்த 15 வருடங்களாக செய்ததை நான் மீண்டும் செய்ய வேண்டியிருக்கும்”
“நீங்கள் 15 வருடங்களாக ஆண்டுக்கு 8 மாதங்கள் வீட்டின் வெளியே இருந்து இந்திய அணிக்காக விளையாடினீர்கள். ஆனால் தற்போது என்னுடைய குழந்தைகள் 14 – 16 வயதில் உள்ளனர். அவர்களும் கிரிக்கெட்டில் விளையாடுகின்றனர். ஒருவர் ஆஃப் ஸ்பின்னர் மற்றொருவர் ஓப்பனிங் பேட்ஸ்மேன். அவர்களுக்கு நான் கொஞ்சம் சொல்லிக் கொடுத்து நேரத்தை செலவிட வேண்டும்”
இதையும் படிங்க: எல்லாத்தையும் கவர் பண்ணிருக்காங்க.. இந்திய அணிக்கு எதிராக இதை செய்வது கஷ்டம் தான்.. ஸ்மித் பேட்டி
“ஒருவேளை இந்திய அணியின் பயிற்சியாளராக வந்தால் நான் வீட்டிலிருந்து வெளியே 8 மாதங்கள் இருக்க வேண்டும் என்பது பெரிய சவாலாக இருக்கும். அதனால் என்னுடைய குழந்தைகளுக்கு நேரத்தை கொடுக்க முடியாது. எனவே ஐபிஎல் தொடரில் பயிற்சியாளர் அல்லது ஆலோசகர் கிடைத்தால் அதை செய்வது பற்றி நான் சிந்திப்பேன்” என்று கூறினார். முன்னதாக ராகுல் டிராவிட்டும் தமது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்காகவே 3வது முறையாக பயிற்சியாளர் பதவியை தொடராமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.