சர்வதேச கிரிக்கெட்டில் மகத்தான பேட்ஸ்மேன்களை உருவாக்கி வரும் தொழிற்சாலையாக கருதப்படும் இந்தியாவில் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் உலகிலேயே 10000 ரன்கள் என்ற மைல்கல்லை டெஸ்ட் கிரிக்கெட்டில் தொட்ட முதல் வீரராக வரலாறு படைத்தார். அவருக்கு பின் வந்த சச்சின் டெண்டுல்கர் அவரையும் மிஞ்சி ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தலா 10000 ரன்கள் அடித்து ஒரு சதத்தை பதிவு செய்வதற்கு தடுமாறும் பல வீரர்களுக்கு மத்தியில் அசால்டாக 100 சதங்களை விளாசி எளிதில் உடைக்க முடியாத சாதனைகளை படைத்துள்ளார். தற்போது அவருக்கு பின் வந்த விராட் கோலி அவர் படைத்த சாதனைகளை குறைந்த இன்னிங்ஸில் வேகமாக உடைத்து புதிய பிரமிக்கும் சாதனைகளை படைத்து வருகிறார்.
குறிப்பாக 31 வயதிலேயே 70 சதங்களை விளாசி அனைவரையும் மலைக்க வைத்த அவர் 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வந்த கதையை 2022 ஆசிய கோப்பையில் உடைத்து அதற்குள் 5 சதங்களை அடித்துள்ளார். அதனால் ஓய்வு பெறுவதற்கும் சச்சினின் 100 சதங்கள் உலக சாதனை தூளாக்குவார் என்று எதிர்பார்க்கப்படும் அவர் அதையும் தாண்டி 110 – 125 சதங்கள் வரை அடிக்க வாய்ப்புள்ளதாக சோயப் அக்தர், ஹர்பஜன் சிங் போன்ற சில முன்னாள் வீரர்கள் வெளிப்படையாக பாராட்டி வருகிறார்கள்.
காலங்கள் வேற:
இருப்பினும் 70, 80களில் ஹெல்மெட் போடாமலேயே மண்டையை பதம் பார்க்கக் கூடிய வெறித்தனமான வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை எதிர்கொண்ட கவாஸ்கருக்கும் தற்போதுள்ள பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ளும் பவுலர்களுக்கும் இடையேயான வித்தியாசம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. அதே போல் பாதுகாப்பு உபகரணங்களுடன் சச்சின் டெண்டுல்கர் எதிர்கொண்ட வாசிம் அக்ரம், இம்ரான் கான், கிளன் மெக்ராத், வாஸ், பிரட் லீ போன்ற அற்புதமான வேகப்பந்து வீச்சாளர்களுடன் மாயாஜாலம் நிகழ்த்திய முரளிதரன், ஷேன் வார்னே ஆகிய தரமான ஸ்பின்னர்களை எதிர்கொள்ள வேண்டும் என்று விரும்பினாலும் இந்த காலத்தில் இருக்கும் பேட்ஸ்மன்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது.
இப்போதும் ஜேம்ஸ் ஆண்டர்சன், மிட்சேல் ஸ்டார்க், ட்ரெண்ட் போல்ட் போன்ற தரமான பவுலர்கள் கணிசமாக இருந்தாலும் 90களில் ஜிம்பாப்வே அணியில் கூட தரமான பவுலர்கள் இருந்தது போல் தற்போது உலகின் அனைத்து அணிகளிலும் இருக்கிறார்களா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. இந்த நிலையில் தற்போது 75 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி தங்களது காலத்தில் விளையாடியிருந்தால் இந்நேரம் 30 – 35 சதங்களை தாண்டியிருக்க முடியாது என்று சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ஏனெனில் அப்போதிருந்த தரமான பவுலர்களும் அவர்களுக்கு சாதகமான விதிமுறைகளும் தற்போது இல்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.
“ஒருவேளை நான், வகார் யூனிஸ், வாசிம் அக்ரம் ஆகியோர் தற்போது உச்சகட்ட ஃபார்மில் விளையாடினால் விராட் கோலிக்கு பெரிய சவாலை கொடுப்போம். குறிப்பாக அதிகமாக ஸ்லெட்ஜிங் செய்யும் போது பஞ்சாபியாக இருப்பதால் அவர் நிச்சயம் அதற்கு பதில் கொடுத்திருப்பார். நாங்கள் அவருக்கு நிறைய ஊசி போட்டிருப்போம். அதே போல் ஒருவேளை அவர் எங்களது காலத்தில் விளையாடியிருந்தால் அவர் நிச்சயமாக இந்நேரம் 30 – 50 மட்டுமே அடித்திருக்க முடியும். ஆனால் அதனுடைய தரம் இன்னும் வித்தியாசமாக இருந்திருக்கும்”
“பொதுவாக நாங்கள் சுனில் கவாஸ்கரை மகத்தானவர் என்று கருதுவோம். ஏனெனில் அவர் வரலாற்றிலேயே மிகவும் கடினமான 80களில் இருந்த பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு 34 சதங்களை அடித்தார். சச்சின் டெண்டுல்கரும் அவரைப் போலவே மகத்தானவர். ஏனெனில் அவர் எங்களது காலத்தில் இருந்த விதிமுறைகளால் கட்டுப்படுத்தப்படாத பவுலர்களை எதிர்கொண்டார்”
இதையும் படிங்க:ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இணைந்து படைக்கவிருக்கும் சாதனை – சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள சம்பவம்
“இருப்பினும் இந்த காலத்திற்கு நிகராக அற்புதமாக விளையாடும் விராட் கோலி தனது 43 வயது வரை இன்னும் 8 முதல் 9 வருடங்கள் விளையாட விரும்புகிறேன். மேலும் இந்தியாவும் அவரை வீல்சேரில் அமர வைத்தாவது 100 சதங்களை எட்ட வைத்து விடுவார்கள். எனவே அவர் ஓய்வு பெறும் போது குறைந்தது 110 சதங்கள் அடித்திருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என கூறினார்.