
ஆர்.சி.பி அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை தான் விளையாடியுள்ள 14 ஆட்டங்களில் 8 அரைசதங்களுடன் 146 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 55 ரன்கள் சராசரியுடனும் 614 ரன்களை குவித்துள்ளார். இந்த தொடர் முழுவதுமே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் இறுதி போட்டிகளிலும் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் இன்று ஜூன் 3-ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கும் மாபெரும் இறுதிப்போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோத இருக்கின்றன.
இந்த போட்டியில் ஆர்.சி.பி அணி வெற்றிபெற வேண்டுமெனில் விராட் கோலியின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற முதலாவது குவாலிபயர் போட்டியில் ஆர்சிபி அணி பஞ்சாப் அணியை எளிதில் வீழ்த்தியதால் நிச்சயம் இந்த போட்டியிலும் ஆர்சிபி அணி அவர்களை வீழ்த்தி வெற்றிபெறும் என பலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் இந்த மாபெரும் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ள விராட் கோலி ஐபிஎல் தொடரில் முதல் நபராக வரலாற்று சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார். அந்த வகையில் அவர் படைக்க இருக்கும் சாதனை யாதெனில் : இந்த போட்டியில் அவர் 86 ரன்களை குவிக்கும் பட்சத்தில் நடப்பு 2025 ஐபிஎல் தொடரில் 700 ரன்களை கடப்பார்.
அப்படி அவர் 700 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் மூன்று சீசனில் 700 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்துவார். ஏற்கனவே கிரிஸ் கெயிலுடன் இணைந்து விராட் கோலி 2 சீசனில் 700-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்திருக்கும் வேளையில் அவருக்கு இந்த வாய்ப்பு காத்திருக்கிறது.
இதையும் படிங்க : என்னுடைய கணிப்பின் படி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றப்போகும் டீம் இதுதான் – யோக்ராஜ் சிங் கருத்து
கடந்த 2016 ஆம் ஆண்டு 16 போட்டிகளில் விளையாடிய அவர் 973 ரன்களை குவித்துள்ள வேளையில் கடந்த 2024 ஆம் ஆண்டும் 15 ஆட்டங்களில் விளையாடி 741 ரன்களை குவித்திருந்தார். அதனை தொடர்ந்து இந்த தொடரிலும் 700 ரன்கள் குவித்தால் முதல் நபராக மூன்று வெவ்வேறு ஐபிஎல் தொடர்களில் 700 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.