இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது நேற்று திருவனந்தபுரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 390 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 166 ரன்களையும், துவக்க வீரர் சுப்மன் கில் 116 ரன்களையும் குவித்து அசத்தினார்.
அதனை தொடர்ந்து 391 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 22 ஓவர்களில் 73 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக இந்திய அணி 317 வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.
இந்த ஆண்டு இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரானது நடைபெற உள்ள வேளையில் இந்திய அணி சொந்த மண்ணில் அடுத்தடுத்து ஒருநாள் தொடர்களில் பங்கேற்க இருக்கிறது. இப்படி இந்த ஆண்டின் துவக்கத்திலேயே இலங்கை அணியை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் அவர்களை வீழ்த்தி சிறப்பாக இந்த வருடத்தை துவங்கியுள்ளது.
இப்படி இந்திய அணியானது தற்போது சிறப்பாக உலகக்கோப்பையை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் குறித்து பேசிய விராட் கோலி கூறுகையில் : முகமது ஷமி எப்பொழுதுமே நமது அணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
ஆனால் தற்போது சிராஜ் விளையாடி வரும் விதம் அபரிவிதமாக இருக்கிறது. அவர் பவர்பிளே ஓவர்களிலேயே தொடர்ச்சியாக விக்கெட்டுகளை கைப்பற்றும் பவுலராக இருக்கிறார். இதற்கு முன்னர் இதுபோன்ற ஒரு பவுலர் இந்திய அணியில் இல்லாமல் இருந்து வந்தது சற்று சிரமத்தை அளித்தது. ஆனால் தற்போது சிராஜ் தனது பந்துவீச்சின் மூலம் பேட்ஸ்மேன்களை யோசிக்க வைக்கிறார். எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு நிச்சயம் அவரது பந்துவீச்சு பெரிய அளவில் உதவும், இது ஒரு நல்ல அறிகுறி என்று முகமது சிராஜை புகழ்ந்து விராட் கோலி தனது கருத்தினை தெரிவித்தார்.
இதையும் படிங்க : கம்பேக் எப்போது? விபத்துக்கு பின் நன்றியுடன் ரிஷப் பண்ட் போட்ட முதல் ட்வீட்டர் பதிவு – நலம் விசாரிக்கும் ரசிகர்கள்
ஏற்கனவே ரோகித் சர்மாவும் போட்டி முடிந்தவுடன் முகமது சிராஜ் சிறப்பாக பந்துவீசுகிறார் என்று பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் 10 ஓவர்கள் வீசிய முகமது சிராஜ் ஒரு மெய்டன் உட்பட 32 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.