
இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி மார்ச் 12-ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் துவங்க உள்ளது. மதியம் 2 மணிக்கு துவங்கும் இந்தப் போட்டி பகலிரவு போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் விளையாடப்பட உள்ளது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக மொகாலியில் நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இலங்கையை பந்தாடிய இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. இதன் வாயிலாக 1 – 0* என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை வகிக்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2-வது போட்டியிலும் வெற்றி பெற்று ஒயிட் வாஷ் பெற்றியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பார்ம் அவுட் விராட் கோலி:
இந்த போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 2-வது வீடாக கருதும் பெங்களூருவில் விளையாட உள்ளது பலரிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த 2008 முதல் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் அவருக்கு பெங்களூருவில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளது. சொல்லப்போனால் பெங்களூர் மக்கள் அவரை தங்களில் ஒருவராக கருதி கொண்டாடி வருகிறார்கள்.
அப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் 100 போட்டிகளில் விளையாடிய 12வது இந்திய வீரராக சாதனை படைத்த அவர் தனது 101வது போட்டியாக பெங்களூருவில் விளையாட உள்ளார். இந்த வேளையில் கடந்த 2 வருடங்களாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் பார்மின்றி தவித்து வரும் அவர் தமக்கு பிடித்த பெங்களூரு மைதானத்தில் சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அவரின் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
விட்ட இடத்தில் தொடங்குவாரா கிங் கோலி:
சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு பின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது 70வது சதத்தை அடித்திருந்தார். உலகப் புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிராக நடந்த அந்த போட்டியில் இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பகல்-இரவு போட்டியில் விளையாடியது. அந்த சரித்திரம் வாய்ந்த போட்டியில் 194 பந்துகளில் 136 ரன்களை எடுத்த விராட் கோலி பகலிரவு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் மற்றும் முதல் இந்திய கேப்டன் ஆகிய சரித்திர சாதனைகளை படைத்தார்.
ஆனால் அதன்பின் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திண்டாடி வரும் அவர் இழந்த தனது பார்ம்மை விட்ட இடத்தில் பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அவரின் ரசிகர்களிடையே காணப்படுகிறது. அதாவது கடைசியாக ஒரு பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த அவர் தற்போது இலங்கைக்கு எதிராக பெங்களூருவில் நடைபெறும் அதே பகல் – இரவு போட்டியில் சதம் அடித்து 2 வருடங்களாக நெருங்காமல் அடம் பிடிக்கும் தனது 71-வது சதத்தை பதிவு செய்வாரா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
பார்ம் அவுட் கிடையாது:
பொதுவாக கடந்த 2 வருடங்களாக சதம் அடிக்க முடியாமல் இருந்து வரும் அவரை பார்ம் அவுட் என பலரும் கூறுகிறார்கள். இந்தப் பதிவின் 2-வது பகுதியில் கூட அவ்வாறு தான் குறிப்பிட்டுள்ளேன். ஆனால் உணமையாகவே அவர் பார்ம் அவுட் கிடையாது என்பது தான் நிதர்சனமான உண்மையாகும். என்னதான் கடந்த 2 வருடங்களாக அவர் சதம் அடிக்கவில்லை என்றாலும் நிறைய அரை சதங்கள் அடித்து தம்மால் முடிந்த அளவுக்கு ரன்களை எடுத்து வருகிறார்.
இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் அவர் கடைசியாக சதம் அடித்த 2019 நவம்பருக்கு பின்பு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியல் இதோ:
1. விராட் கோலி : 2442* ரன்கள் (71 இன்னிங்ஸ்)
2. கேஎல் ராகுல் : 2306 ரன்கள் (57 இன்னிங்ஸ்)
3. ரோஹித் சர்மா : 2328 ரன்கள் (58 இன்னிங்ஸ்)
4. ரிஷப் பண்ட் : 1888 ரன்கள் (59 இன்னிங்ஸ்)
5. ஷ்ரேயஸ் ஐயர் : 1427 ரன்கள் (44 ரன்கள்)
இதிலிருந்தே புள்ளி விபரங்களின் அடிப்படையில் இன்னிங்ஸ் அதிகமாக இருந்தாலும் கூட இதர இந்திய வீரர்களை விட கடந்த 2 வருடங்களாக விராட் கோலி அதிக ரன்களை குவித்துள்ளது தெளிவாக தெரியவருகிறது. இதிலிருந்து அவர் பார்ம் அவுட் இல்லை என கூறலாம். இருப்பினும் அவரைப் போன்ற ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரருக்கு இந்த நிலைமை கண்டிப்பாக ஒரு பார்ம் அவுட்டுக்கு நிகரான ஒன்றாகும்.
இதையும் படிங்க : இலங்கை அணிக்கெதிரான தொடரில் இடம்பிடித்திருந்த இளம் வீரர் அணியில் இருந்து நீக்கம் – அதிகாரபூர்வ அறிவிப்பு
அவரைப் போன்ற ஒரு தரமான வீரர் சதம் அடித்தால் மட்டுமே நல்ல பார்மில் இருக்கிறார் என்ற நிலையை இதற்கு முன்பு சிறப்பாக விளையாடிய காரணத்தால் அவர் தான் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.