நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 2008 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி கடந்த 15 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் உலகின் அனைத்து தரமான டாப் பவுலர்களை எதிர்கொண்டு 25000+ ரன்களையும் 75 சதங்களையும் விளாசி ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். அதே போல கேப்டனாக உலகக்கோப்பையை வென்று கொடுக்காவிட்டாலும் வெளிநாடுகளில் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக ஒரு தொடரை வென்று சரித்திர சாதனை படைத்த அவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் மறக்க முடியாத சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார்.
மேலும் சச்சின் டெண்டுல்கர் படைத்த சாதனைகளை வேகமாக செயல்பட்டு உடைத்து வரும் அவர் 34 வயதிலேயே இந்திய கிரிக்கெட்டுக்கு நிறைய பங்காற்றி உலக அளவில் நவீன கிரிக்கெட்டில் ஜாம்பவானாக செயல்பட்டு வருகிறார். அதே போலவே ஐபிஎல் தொடரிலும் அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்து வரும் அவர் பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக அசத்தி வருகிறார். பொதுவாக விராட் கோலி என்றாலே மாஸ்டர் கிளாஸ் பேட்டிங், வேகமான ஓட்டம், ரன் மெஷின், அபாரமான ஃபீல்டிங் ஆகியவற்றால் ரசிகர்களிடம் மிகவும் புகழ் பெற்றவர்.
எல்லாம் வாய் வார்த்தை தான்:
ஆனால் அவை அனைத்தையும் விட இயற்கையிலே உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியாத குணத்தை கொண்ட அவர் இந்திய அணியை அல்லது இந்திய வீரர்களை மிரட்டும் எதிரணி வீரர்களை தெறிக்க விடும் அளவுக்கு தன்னுடைய முகத்தில் ஆக்ரோசத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தி பதிலடி கொடுப்பதில் புகழ்பெற்றவர். குறிப்பாக ஸ்லெட்ஜிங் செய்த மிட்சேல் ஜான்சன் போன்ற வெளிநாட்டு வீரர்களுக்கு அவர்களை விட அதிகமாக ஸ்லெட்ஜிங் செய்து பதிலடி கொடுக்கும் தன்மையை கொண்ட விராட் கோலி களத்தில் அது போன்ற சண்டைகளுக்கு அஞ்சாதவராகவே அறியப்படுகிறார்.
மேலும் ஒரு விக்கெட் விழுந்தால் கூட அதை எதிரணி வீரர்களின் முகத்தில் குத்துவது போல் வெறித்தனமாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ள அவர் சமீபத்திய சென்னைக்கு எதிரான போட்டியில் சிவம் துபேவின் விக்கெட்டை அவ்வாறு கொண்டாடியதற்காக 10% சம்பளத்தை அபராதமாக கட்டினார். அப்படி சாதாரணமாகவே வெறித்தனமாக கொண்டாடும் அவர் உண்மையாகவே களத்தில் உடல்ரீதியான சண்டை ஏற்படும் போது எதிரணி வீரர்களை அடித்து நொறுக்குபவராகவே கருதப்படுகிறார்.
ஆனால் ஸ்லெட்ஜிங் செய்து ஆக்ரோசத்தை வெளிப்படுத்துவது எல்லாம் முகம் மற்றும் வாய் வார்த்தைகள் மட்டும் தான் என்று தெரிவிக்கும் விராட் கோலி உண்மையாகவே உடல்ரீதியான சண்டை என்றாலே தமக்கு பயம் என்று ரசிகர்கள் எதிர்பாராத பதிலை கொடுத்துள்ளார். குறிப்பாக தன்னுடைய இளம் வயதில் நண்பர்களுடன் அது போல் உடல் ரீதியான சண்டை போட்டதில்லை என்று தெரிவிக்கும் அவர் களத்தில் போடும் வார்த்தை சண்டைகள் கூட நடுவர் உள்ளே புகுந்து தடுத்து விடுவார் என்ற தைரியத்தில் ஈடுபடுவதாக கலகலப்புடன் கூறியுள்ளார்.
Virat bro 😭, bhai ladta hai cause he knows umpire beech mein ajayega 😂. #ViratKohli pic.twitter.com/7xM6MhpatZ
— Aani⁷ ★彡 (@wigglyywhoops) April 21, 2023
இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “உடல் ரீதியான மோதலுக்கு நிச்சயமாக வாய்ப்பில்லை. யாராவது என்னை அடித்தால் நான் இறந்து விடுவேன். எனக்கு என்ன நடந்தது என்று கூட அவருக்கு தெரியாது. எனவே நான் எப்போதும் அது போன்ற சண்டையில் ஈடுபடுவதில்லை. வாய் வார்த்தையாக நான் எது வேண்டுமானாலும் சொல்வேன். ஆனால் களத்தில் எப்போதும் உடல் ரீதியான சண்டைகளில் ஈடுபட மாட்டேன்”
இதையும் படிங்க:வீடியோ : ஒரே ஓவரில் 3 விக்கெட்களை வீழ்த்தி மிரட்டிய வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் துல்லியம் – டெல்லி தடுமாற்ற ஸ்கோர்
“களத்தில் நான் சொல்லும் சில வார்த்தைகள் கூட அந்த சமயத்தில் நிலவும் சூழ்நிலைக்கு பேச வேண்டியதாக இருக்கும். அத்துடன் களத்தில் சண்டை போட்டால் நடுவர்கள் அதை தடுப்பதற்கு வருவார்கள் என்பதை அனைவரும் அறிவோம்” என்று சிரித்துக் கொண்டே கூறினார். இதிலிருந்து வெளியில் தான் பார்ப்பதற்கு எரிமலையைப் போல் செயல்படும் விராட் கோலி உள்ளுக்குள் குழந்தை போன்ற மனதை கொண்டது தெரிய வருகிறது.