ஒருவேளை இந்தியாவை நாங்க தோற்கடிச்சா இதையே சொல்விங்களா? தெ.ஆ கேப்டன் பாவுமா ஆவேச பேட்டி

Temba Bavuma
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையின் இந்தியா தங்களுடைய முதல் 7 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று செமி ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய 8வது போட்டியில் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் இருப்பதுடன் செமி ஃபைனலுக்கு 2வது அணியாக தகுதி பெற்ற வலுவான தென்னாப்பிரிக்காவை நவம்பர் 5ஆம் தேதி எதிர்கொள்கிறது.

டீ காக், க்ளாஸென், டுஷன், டேவிட் மில்லர் போன்ற அதிரடியான வீரர்களால் பேட்டிங் துறையில் மிரட்டலாக செயல்பட்டு அசால்டாக 300 – 400 ரன்களை குவிக்கும் தென்னாபிரிக்கா பந்து வீச்சு துறையிலும் ரபாடா, யான்சென், கேசவ் மகாராஜ் போன்ற வீரர்களால் வலுவான அணியாக இருக்கிறது. அதனால் நிச்சயமாக இந்த போட்டியில் இந்தியாவுக்கு சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்றே சொல்லலாம்.

- Advertisement -

இதையே சொல்விங்களா:
இந்நிலையில் தொடர்ச்சியாக 7 போட்டிகளில் வென்று வரும் இந்தியாவை வீழ்த்துவீர்களா அல்லது வழக்கமான சொதப்பலை அரங்கேற்றி சோக்கராக செயல்படுவீர்களா என இப்போட்டிக்கு முன்பாக செய்தியாளர்கள் நேரடியாகவே தென்னாப்பிரிக்கா கேப்டன் தெம்பா பவுமாவிடம் கேட்டனர். ஆனால் அதற்கு இதே போட்டியில் நாங்கள் வென்றால் தோல்வியை சந்தித்த இந்தியாவை சோக்கர் என்று சொல்வீர்களா என பவுமா பதிலடி கொடுத்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சோக் செய்வோமா? இதற்கு நான் எப்படி பதிலளிப்பது என்று தெரியவில்லை. ஒருவேளை நாங்கள் இந்த போட்டியில் சொதப்பினால் அதை சோக்கிங் செய்து விட்டோம் என்று நான் நினைக்க மாட்டேன். ஒருவேளை இந்தியா இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தால் நீங்கள் அவர்களை சோக்கர் சொல்வீர்களா என்பது எனக்கு சந்தேகமாகும்”

- Advertisement -

“நல்ல ஃபார்மில் இருக்கும் 2 அணிகள் போட்டியில் மோதுகின்றன. அதில் யார் தடையை உடைத்து முக்கிய தருணங்கள் அல்லது பலவீனங்களை பயன்படுத்துகிறார்களோ அவர்களே வெல்வார்கள் என்று நான் கருதுகிறேன். உலகக் கோப்பைக்குள் அழுத்தமான தருணங்கள் எப்போதும் இருக்கும் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால் இந்த இடத்திற்கு நாங்கள் வருவதற்கு முன் நிறைய கடினமான தருணங்களை கடந்து வந்துள்ளோம்”

இதையும் படிங்க: உலககோப்பை தொடரில் இருந்து வெளியேறிய பின்னர் ஹார்டிக் பாண்டியா பகிர்ந்த – நெகிழ்ச்சியான பதிவு

“எங்களால் முடிந்த வரை அவர்களை சமாளிப்போம். ஆனால் சோக்கர் எனும் வார்த்தையை இதுவரை நான் பயிற்சியில் கேட்கவில்லை” என்று கூறினார். மேலும் இப்போட்டி நடைபெறும் கொல்கத்தா மைதானம் சுழலுக்கு சாதகமாக இருந்தால் 2 ஸ்பின்னர்களுடன் விளையாடுவோம் என்றும் பவுமா தெரிவித்தார். அந்த வகையில் நாக் அவுட் சுற்றில் மோதுவதற்கு முன்பாக இப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா தங்களுடைய முழு பலத்தைக் காட்டி வெற்றிக்கு போராட தயாராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement