இந்திய அணியின் இளம் துவக்க வீரரான சுப்மன் கில் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஏனெனில் கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகிய சுப்மன் கில் இதுவரை 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 687 ரன்களை குவித்துள்ளார். அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு மட்டும் 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 70 ரன்கள் சராசரியுடன் 600-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.
இப்படி தனது கரியரின் அசத்தலான பார்மில் இருக்கும் சுப்மன் கில் தொடர்ச்சியாக இந்திய அணியில் இடம் பிடித்து விளையாட வேண்டும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது. ஏனெனில் அண்மையில் நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் துவக்க வீரராக இடம் பிடித்திருந்த சுப்மன் கில் அங்கு அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய வேளையில் தற்போது நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் சீனியர் வீரர்கள் அணிக்கு திரும்பியதால் கழட்டி விடப்பட்டுள்ளார்.
ஆனால் அவருக்கு இருக்கும் திறமைக்கு தொடர்ச்சியாக அவர் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் துவக்க வீரராக யார் விளையாட வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :
எப்பொழுதுமே ஒரு அணியில் வலது கை மற்றும் இடதுகை துவக்க வீரர்கள் காம்பினேஷனாக இருப்பது நல்லது. அந்த வகையில் ஷிகார் தவான் இடது கை ஆட்டக்காரர் என்பது மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய அனுபவத்தை கொண்டவர். அவர் பலமுறை தான் ஒரு சிறந்த கிரிக்கெட்டர் என்பதை நிரூபித்துள்ளார். என்னை பொறுத்தவரை அவர் டி20 போட்டியில் கூட விளையாடும் அளவிற்கு தகுதியானவர் என்று சுனில் கவாஸ்கர் கூறினார். மேலும் சுப்மன் கில் குறித்து பேசிய அவர் :
சுப்மன் கில் இன்னும் நிறைய சதங்களை அடிக்க வேண்டும். அவர் 50 ரன்கள் முதல் 60 ரன்கள் வரை ஒவ்வொரு போட்டிலும் அடித்த பின்னர் தொடர்ச்சியாக ஆட்டம் இழந்து வருகிறார். ஆனால் அவர் ஒரு மிகச் சிறப்பான திறமை படைத்தவர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. பேட்டிங்கில் மிகப் பிரமாதமாக விளையாடும் அவர் ஒரு அரிய திறமை உடைய வீரர். ஆனாலும் அவருக்கு இருக்கும் திறமைக்கு அவர் 50 ரன்கள், 60 ரன்களில் அவுட் ஆவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதையும் படிங்க : இங்கிலாந்துல மட்டுமில்ல பாகிஸ்தானிலும் அவங்களோட அந்த ட்ரிக் ஒர்க் ஆயிருக்கு – அசத்திய இங்கிலாந்து
நிச்சயம் அவர் இன்னும் நிறைய சதங்களை அடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். 50 முதல் 60 ரன்கள் அடிப்பதை விட அதனை சதமாகவும் அதற்கு மேலாகவும் எடுத்து செல்வதே சரியான வீரருக்கு அழகு என்று கவாஸ்கர் கூறியுள்ளார். வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பிடிக்காத சுப்மன் கில் டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.