தங்களது 2023 உ.கோ அணியை அறிவித்த தெ.ஆ – அடுத்த நிமிடமே திடீர் ஓய்வை அறிவித்த 30 வயது நட்சத்திர வீரர், ரசிகர்கள் சோகம்

Quinton De Kock
- Advertisement -

இந்தியாவில் நடைபெறும் 2023 உலகக் கோப்பை தொடரில் களமிறங்கும் தங்களுடைய 15 பேர் கொண்ட அணியை அனைத்து நாடுகளும் செப்டம்பர் 5ஆம் தேதி சமர்ப்பிப்பதற்கு ஐசிசி கெடு விதித்திருந்தது. அதை தொடர்ந்து இன்று மதியம் 1:00 மணிக்கு ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார். அடுத்த சில மணி நேரங்களில் தங்களுடைய லட்சிய முதல் உலகக் கோப்பையை வெல்வதற்காக தென்னாப்பிரிக்கா 15 பேர் கொண்ட கிரிக்கெட் அணியை வெளியிட்டது.

தெம்பா பவுமா தலைமை தாங்கும் அந்த அணியில் இதுவரை வெறும் 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்சி ஆச்சரியப்படும் வகையில் தேர்வாகியுள்ளார். மற்றபடி குவிண்டன் டீ காக், ரிசா ஹென்றிக்ஸ், ஐடன் மார்க்ரம், ஹென்றிச் க்ளாஸென், ராசி வேன் டெர் டுஷன், டேவிட் மில்லர் போன்ற நட்சத்திர வீரர்கள் பேட்டிங் துறையை வலுப்படுத்துவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

30 வயதிலேயே ஓய்வு:
அதே போல வேகப்பந்து வீச்சு துறையில் ரபாடா, நோர்ட்ஜெ, லுங்கி நிகிடி ஆகிய நட்சத்திர வீரர்களும் சுழல் பந்து வீச்சு துறையில் கேசவ் மகாராஜ், மற்றும் தப்ரீஸ் சம்சி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர துவக்க வீரர் குயிண்டன் டீ காக் 2023 உலக கோப்பையுடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான அவர் அதிரடியாக விளையாடும் துவக்க வீரராக தன்னை அடையாளப்படுத்தி தென்னாபிரிக்கா அணியில் நிரந்தர இடத்தை பிடித்ததுடன் திறந்த செயல்பாடுகளால் உலக ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். இருப்பினும் நவீன கிரிக்கெட்டில் டி20 போட்டிகளில் வருகையால் ஐபிஎல் போன்ற பல்வேறு பிரீமியர் லீக் டி20 தொடர்களில் பணிச்சுமையை நிர்வகித்து விளையாடுவதற்காக அவர் கடந்த வருடமே 29 வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்தார்.

- Advertisement -

அந்த வரிசையில் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் அதிகமாக விளையாடி தம்முடைய கேரியரை நீட்டிப்பதற்காக 30 வயதிலேயே ஒருநாள் போட்டிகளிலிருந்து அவர் விடை பெறுவதாக அறிவித்துள்ளார். இதுவரை 140 ஒருநாள் போட்டிகளில் 5966 ரன்களை 44.85 என்ற நல்ல சராசரியிலும் 96.0 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் குவித்துள்ள அவர் 29 அரை சதங்கள் மற்றும் 17 சதங்கள் அடித்து தென்னாப்பிரிக்காவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து மேட்ச் வின்னராக மிகவும் தரமான வீரராக செயல்பட்டு வந்தார் என்று சொல்லலாம்.

இதையும் படிங்க: வீடியோ : இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுத்த டாப் 3 நேபாள் வீரர்களுக்கு – விருது வழங்கிய பாண்டியா, கோலி, டிராவிட்

மேலும் விக்கெட் கீப்பராகவும் 183 கேட்ச்கள் மற்றும் 14 ஸ்டம்பிங்களை செய்துள்ள அவர் 2015, 2019 ஆகிய உலகக் கோப்பை தொடர்களிலும் விளையாடி 17 போட்டிகளில் 450 ரன்கள் எடுத்துள்ளார்.2023 உலகக் கோப்பை தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி: தெம்பா பவுமா (கேப்டன்), ஜெரால்டு கோட்சி, குயிண்டன் டீ காக், ரிசா ஹென்றிக்ஸ், மார்க்கோ யான்சன், ஹென்றிச் க்ளாஸென், சிசண்டா மகலா, கேசவ் மகாராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, அன்றிச் நோர்ட்ஜெ, காகிஸோ ரபாடா, தப்ரிஸ் சம்சி, ராசி வேன் டெர் டுஷன்

Advertisement