ஐசிசி உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 7ஆம் தேதி இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 4வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தி 50 ஓவர்களில் 428 ரன்கள் குவித்து அசத்தியது.
அந்த அணிக்கு கேப்டன் பவுமா ஆரம்பத்திலேயே 8 ரன்களில் அவுட்டாகி சென்ற போதிலும் அடுத்ததாக வந்த டென் டெர் டுஷனுடன் ஜோடி சேர்ந்த மற்றொரு துவக்க வீரர் குவிண்டன் டீ காக் அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்து 12 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்து 100 (84) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருடன் ஜோடி சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய டுஷன் 13 பவுண்டரி 2 சிக்ஸருடன் சதமடித்து 108 (110) ரன்கள் குவித்து அசத்தினார்.
தனித்துவ உலக சாதனை:
அவர்களைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் இலங்கை பவுலர்களுக்கு கருணை காட்டாமல் களமிறங்கியது முதலே அடித்து நொறுக்கிய ஐடன் மார்க்ரம் வெறும் 49 பந்துகளில் 100 ரன்கள் தொட்டு உலகக்கோப்பை வரலாற்றில் வேகமாக சதமடித்த வீரராக சாதனை படைத்து மொத்தம் 14 பவுண்டரி 3 சிக்சருடன் 106 (54) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதற்கிடையே கிளாசின் 32 (20) ரன்களில் ஆட்டமிழந்தாலும் இறுதியில் டேவிட் மில்லர் 39* (21) மார்கோ யான்சென் 12* (7) ரன்கள் எடுத்தனர்.
அதன் காரணமாக உலகக்கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் (428/5) பதிவு செய்த அணியாக ஆஸ்திரேலியாவின் சாதனையை உடைத்த தென்னாப்பிரிக்கா புதிய வரலாறு படைத்தது. அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற இந்தியாவின் சாதனையையும் உடைத்த தென்னாப்பிரிக்கா புதிய உலக சாதனை படைத்தது. இதற்கு முன் 2009இல் ராஜ்கோட் நகரில் நடைபெற்ற போட்டியில் இலங்கைக்கு எதிராக இந்தியா 414/7 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும்.
அதை விட இந்த போட்டியில் குவிண்டன் டீ காக் 100, வேன் டெர் டுஷன் 108, ஐடன் மார்க்ரம் ஆகிய 3 வீரர்கள் சதமடித்துள்ளனர். இதன் வாயிலாக உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே போட்டியில் 3 சதங்களை பதிவு செய்த அணி என்ற தனித்துவமான உலக சாதனையையும் தென்னாப்பிரிக்கா படடைத்துள்ளது. கடந்த 1975 முதல் நடைபெற்று வரும் 48 வருட உலகக்கோப்பை வரலாற்றில் வரை 450க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெற்ற போதிலும் அதில் எதிலுமே இது போல் 3 வீரர்கள் சதமடித்ததில்லை.
இதையும் படிங்க: AFG vs BAN : நல்லா ஸ்டார்ட் பண்ணியும் நாங்க தோக்க இதுவே காரணம். தோல்விக்கு பிறகு – ஆப்கான் கேப்டன் வருத்தம்
அத்துடன் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக முறை 400+ ரன்கள் அடித்த அணி என்ற சாதனையும் தென்னாப்பிரிக்கா தன்வசம் வைத்துள்ளது. இதுவரை 3 முறை 400+ ரன்கள் அடித்துள்ள தென்னாபிரிக்காவை தவிர்த்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தலா 1முறை மட்டும் 400+ ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.