ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்ற 14-வது லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்த நடப்பு 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியின் போது 210 ரன்கள் என்கிற எளிய இலக்கினை துரத்திய ஆஸ்திரேலிய அணியானது ஆரம்பத்திலேயே அதிரடியாக தங்களது இன்னிங்சை ஆரம்பித்தது.
அவ்வேளையில் மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் டேவிட் வார்னர் 6 பந்துகளில் 11 ரன்களில் இருந்த போது இலங்கை வீரர் மதுஷங்கா பந்துவீச்சில் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரின் இந்த விக்கெட் தான் நேற்றிலிருந்து பலரது மத்தியிலும் பெரிய அளவில் விவாதிக்கப்படும் விடயமாக மாறியுள்ளது.
ஏனெனில் மூன்றாவது ஓவரின் முதல் பந்தை வீசிய மதுஷங்கா அவரை எல்.பி செய்தவுடன் களத்தில் இருந்த அம்பயரிடம் விக்கெட்டுக்கு முறையிட்டார். உடனே களத்தில் இருந்த அம்பயரும் சற்று யோசித்து விட்டு டேவிட் வார்னர் அவுட் என்று அறிவித்தார். ஆனால் அதனை எதிர்பாராத வார்னர் மூன்றாவது நடுவரிடம் ரிவ்யூ செய்தார். பின்னர் மூன்றாவது அம்பயர் சோதித்ததில் பந்து லெக் ஸ்டம்பை வெளிப்புறமாக தட்டி தெரியவந்தது.
ஆனாலும் அம்பயர்ஸ் கால் என்ற விதிமுறைப்படி களத்தில் இருந்த அம்பயர் ஏற்கனவே அவுட் என்று என்று அறிவித்திருந்ததால் அவர் அதிர்ஷ்டவசமின்றி மீண்டும் அவுட் என்று அறிவிக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த வார்னர் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் களத்தில் இருந்து அம்பயரை கடுமையாக திட்டியவரே கோபத்துடன் வெளியேறினார்.
அவரது இந்த செயல் பலரது மத்தியிலும் கண்டனங்களை பெற்று இருந்த வேளையில் தற்போது நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான சைமன் டால் அவரது இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : வார்னரின் இந்த மோசமான செயலுக்கு அவருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து அபராதம் விதிக்கப்பட வேண்டும் அல்லது தகுதி இழப்பு புள்ளிகளையாவது வழங்க வேண்டும். ஏனெனில் களத்தில் இருந்த அம்பயர் ஜோயல் வில்சனை அவர் இவ்வாறு கடிந்து இருக்கக்கூடாது.
இதையும் படிங்க : அப்டி அழுதது ஆப்கானிஸ்தான் பையன் இல்ல.. சாக்லேட் கொடுத்து.. இந்தியாவுக்கு நன்றி சொன்ன முஜீப்
நிச்சயம் இது குறித்து ஐசிசி ஒரு சரியான முடிவை எடுக்க வேண்டும். எப்போதுமே களத்தில் இருக்கும் அம்பயர்கள் ரியல் டைமை கணக்கில் வைத்து தான் முடிவுகளை எடுப்பார்கள். அந்த வகையில் நாம் அம்பயர்களின் முடிவை மதித்து தான் ஆக வேண்டும். அவர்களது முடிவு தவறான முடிவோ அல்லது மோசமான முடிவோ கிடையாது. கட்டாயம் ஐசிசி அவருக்கு ஏதாவது தண்டனையை வழங்கும் என்று நம்புவதாகவும் சைமன் டால் வார்னரை எச்சரிக்கும் வகையில் பேசியது குறிப்பிடத்தக்கது.