இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது இன்று ஜனவரி 18-ஆம் தேதி ஹைதராபாத் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் சுப்மன் கில் 149 பந்துகளை சந்தித்து 19 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் என 208 ரன்கள் குவித்து அசத்தினார்.
அவரது இந்த அதிரடியான ஆட்டம் காரணமாக இந்திய அணி 349 ரன்களை குவித்த வேளையில் தற்போது 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. இந்திய அணியின் மற்ற வீரர்கள் யாரும் அரைசதம் கூட கடக்காத வேளையில் தனி ஒரு நபராக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் முதல் ஓவரில் பேட்டிங் செய்ய துவங்கி கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் தான் ஆட்டம் இழந்தார்.
அவரது இந்த சிறப்பான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்று வரும் வேளையில் இந்த மிகச் சிறப்பான இன்னிங்ஸ்ஸின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் பல ஆண்டுகள் யாரும் தகர்க்க முடியாத ஒரு சாதனையை அவர் பதித்துவிட்டு சென்றிருக்கிறார் என்று கூறலாம். ஏனெனில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக இதுவரை சச்சின், சேவாக், ரோஹித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் இரட்டை சதம் அடித்திருந்தனர்.
இவ்வேளையில் தற்போது ஐந்தாவது வீரராக சுப்மன் கில் இந்த பட்டியலில் இணைந்துள்ளார். அதுமட்டும் இன்றி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பட்டியலில் இஷான் கிஷனை பின்னுக்கு தள்ளி தற்போது 23 வயது 132 நாட்களில் அவர் இந்த சாதனையை செய்துள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் வங்கதேசம் அணிக்கெதிராக இஷான் கிஷன் 24-வது வயது மற்றும் 145-வது நாளில் இந்த சாதனையை செய்திருந்தார். தற்போது அவரை முறியடித்துள்ள சுப்மன் கிடில் 23 வயதிலேயே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது அனைவரது மத்தியிலும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டாயம் இவரது இந்த இரட்டை சதம் சாதனையை முறியடிக்க இன்னும் பல ஆண்டு காலங்கள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வீடியோ : இது எப்படி அவுட்டாகும்? ஆதாரத்துடன் அம்பயரின் வண்டவாலத்தை அம்பலமாக்கிய வாசிம் ஜாபர் – கொதிக்கும் ரசிகர்கள்
ஏனெனில் மிகவும் இளம் வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டுக்காக ஒருவர் அறிமுகமானாலும் அவரால் 23 வயதிற்குள் இரட்டை சதம் அடிக்க முடியுமா என்பது ஒரு சந்தேகம் தான். எனவே பலராலும் முறியடிக்க முடியாத ஒரு சாதனையை தற்போது சுப்மன் கில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.