இங்கிலாந்து அணிக்கெதிராக விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியானது தற்போது நான்காம் நாளில் வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் இரட்டை சதம் காரணமாக 396 ரன்களை குவித்தது.
பின்னர் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இங்கிலாந்து அணியானது பும்ராவின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 253 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 143 ரன்கள் முன்னிலை பெற்ற வேளையில் இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கியது.
அப்படி இரண்டாவது இன்னிங்க்ஸை ஆரம்பித்த இந்திய அணியானது துவக்கத்திலேயே அடுத்தடுத்து ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரது விக்கெட்டை இழந்து தடுமாறிய வேளையில் ஒருபுறம் இளம் வீரரான சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவருக்கு பின்னர் களமிறங்கிய வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தாலும் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 147 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 104 ரன்கள் குவித்து அசத்தினார்.
ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க வீரருக்கான இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு மாற்றப்பட்ட சுப்மன் கில் தொடர்ச்சியான சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதன் காரணமாக அவரை டெஸ்ட் அணியிலிருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக மீண்டும் அனுபவ வீரரான புஜாராவை அணிக்குள் கொண்டு வரவேண்டும் என்று பேச்சுக்களெல்லாம் அதிகளவில் எழுந்து வந்தன.
இதையும் படிங்க : பெரிய தலையை தூக்கிய அஸ்வின்.. சந்திரசேகரை மிஞ்சி வரலாற்று சாதனை.. வெற்றியை நெருங்கும் இந்தியா?
இந்நிலையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியே அவருக்கு கடைசி வாய்ப்பாக பார்க்கப்பட்ட வேளையில் சரியான நேரத்தில் இந்திய அணி அழுத்தத்தில் இருந்தபோது இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து தனது இடத்தை இழக்கும் அபாயத்திலிருந்து அவர் வெளியேறிவிட்டார் என்றே கூற வேண்டும்.