
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று லக்னோ நகரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணி சார்பாக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் சதம் அடித்ததன் மூலம் 52 ஆண்டுகால இந்திய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத ஒரு மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளனர். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்திய அணியானது தங்களது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியை கடந்த 1974-ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் தேதி விளையாடியது. அதற்கடுத்து நேற்று நடைபெற்ற போட்டி வரை 52 ஆண்டுகளில் இந்திய அணி 1077 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் எந்த ஒரு போட்டியிலும் படைக்காத ஒரு சாதனை நேற்றைய போட்டியில் படைக்கப்பட்டது.
அதாவது இதுவரை எந்தவொரு ஒருநாள் போட்டியிலும் இரண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் 80 பந்துகளுக்கும் குறைவாக சதம் அடித்தது கிடையாது. ஆனால் நேற்றைய போட்டியின் போது அந்த அரிதான சாதனை முதல்முறையாக அரங்கேறியது. அந்த வகையில் நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இஷான் கிஷன் 71 பந்துகளை சந்தித்திருந்த போது தனது சதத்தை நிறைவு செய்தார்.
ஒட்டுமொத்தமாக இந்த போட்டியில் 89 பந்துகளை சந்தித்த அவர் 14 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் என 125 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதேவேளையில் மற்றொரு வீரரான சுப்மன் கில் 77-வது பந்தில் சதத்தை எட்டி அசத்தினார். இறுதியில் 110 பந்துகளை சந்தித்து 22 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 154 குவித்து ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் 140 பந்துகளில் 224 ரன்கள் குவித்து பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
இதையும் படிங்க : எம்.எஸ் தோனியின் மாபெரும் சாதனையை நேற்று தகர்த்த சுப்மன் கில் – விவரம் இதோ
இவர்களின் அதிரடியால் இந்திய அணி 402 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் 403 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 232 ரன்கள் மட்டுமே அடித்ததால் 170 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.