பரபரப்பான தருணங்களுடன் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் 41 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா ஃபைனலுக்கு முதல் அணியாகவும் தகுதி பெற்று அசத்தியது. கொழும்பு நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோஹித் சர்மா 58, கேஎல் ராகுல் 39, இஷான் கிசான் 33 ரன்கள் எடுத்த உதவியுடன் 49.1 ஓவரில் 213 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை சார்பில் அதிகபட்சமாக துணித் வெல்லாலகே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதை தொடர்ந்து 214 ரன்களை சேசிங் செய்த இலங்கை ஆரம்பம் முதலே தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி முடிந்தளவுக்கு போராடி 41.3 ஓவரில் 172 ரன்கள் மட்டுமே எடுத்த தோற்றது. அந்த அணிக்கு பேட்டிங்கிலும் போராடிய வெல்லாலகே அதிகபட்சமாக 42 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றிக்கு 53 (42) ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
தோனி இல்லைனா:
முன்னதாக இப்போட்டியில் அடித்த 53 ரன்களையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்த 2வது வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்த ரோகித் சர்மா புதிய வரலாறு படைத்தார். ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் விளையாடி ரொம்பவே தடுமாறிக் கொண்டிருந்த அவரின் திறமையை உணர்ந்த அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி 2013இல் சேவாக் – கம்பீர் போன்ற சீனியர்களை வருங்காலத்தை கருத்தில் கொண்டு கழற்றி விட்டு துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை கொடுத்தார்.
அதை இறுக்கமாக பிடித்த ரோகித் சர்மா 3 இரட்டை சதங்கள் அடித்து, அதிகபட்ச ஸ்கோர் குவித்து (264), 2019 உலகக்கோப்பையில் 5 சதங்கள் அடித்து ஏராளமான உலக சாதனைகள் படைத்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து நவீன கிரிக்கெட்டில் ஜாம்பவானாக உருவெடுத்துள்ளார். இந்நிலையில் எம்எஸ் தோனி மட்டும் ஆரம்ப காலங்களில் தொடர் வாய்ப்புகளை கொடுக்காமல் போயிருந்தால் ரோகித் சர்மா இன்று இந்தளவுக்கு வளர்ந்திருக்க முடியாது என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “10000 ரன்களை அடிப்பது அவருக்கு எளிதாக இருந்திருக்காது. ஏனெனில் அவர் நிறைய மேடு பள்ளங்களை சந்தித்துள்ளார். அதைப் பார்த்த காரணத்தாலேயே இளம் வீரர்களுக்கு கடினமான நேரங்களில் ரோகித் சர்மா கேப்டனாக ஆதரவு கொடுத்து இருக்கிறார். மேலும் ரோகித் சர்மா இன்று ரோகித் சர்மாவாக இருக்கிறார் என்றால் அதற்கு எம்எஸ் தோனி காரணமாவார்”
இதையும் படிங்க: உங்களோட பாராட்ட நான் வாங்கிக்க விரும்பல – நன்றி சொன்ன குல்தீப்புக்கு கேஎல் ராகுல் நெகிழ்ச்சி பதில், நடந்தது என்ன?
“ஏனெனில் ஆரம்ப காலகட்டங்களில் தடுமாறிய போது தோனி அவருக்கு தொடர்ந்து ஆதரவுகளையும் வாய்ப்புகளையும் கொடுத்தார். எனவே அதே மரபை உருவாக்க வேண்டுமெனில் ரன்கள் அடிப்பதை விட நிறைய இளம் வீரர்களுக்கு ரோகித் சர்மாவும் ஆதரவு கொடுக்க வேண்டும். அதனால் வருங்கால தலைமுறைக்கு அவர் எப்படி இளம்பிரர்களை வளர்க்கப் போகிறார் என்பதை பார்ப்பதில் ஆவல் ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.