71 ரன்ஸ்.. தெறிக்கும் வான்கடே.. நியூஸிலாந்தை நொறுக்கிய ஹிட்மேன்.. கெயிலை முந்தி 3 புதிய உலக சாதனை

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் முதல் செமி ஃபைனல் போட்டி நவம்பர் 15ஆம் தேதி மதியம் 2 மணிக்கு மும்பையில் துவங்கியது. அதில் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா மற்றும் 4வது இடம் பிடித்த கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதின.

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கிய அந்த போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். மேலும் இப்போட்டியை பார்ப்பதற்காக ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், விவ் ரிச்சர்ட்ஸ் போன்ற பல நட்சத்திரங்கள் மும்பை மைதானத்திற்கு நேராக வந்து போட்டியை அலங்கரித்தார்கள்.

- Advertisement -

மிரட்டிய ஹிட்மேன்:
அதை தொடர்ந்து பேட்டிங் செய்வதற்காக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கிய நிலையில் ட்ரெண்ட் போல்ட் பந்து வீச்சை துவங்கினார். அந்த நிலைமையில் துவங்கிய போட்டியில் 2019 செமி ஃபைனலில் அரங்கேறிய கதையை உடைக்கும் வகையில் ஆரம்பத்திலேயே ட்ரெண்ட் போல்ட் போன்ற பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட ரோஹித் சர்மா பவுண்டரி சிக்சர்களையும் பறக்க விட்டு இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தார்.

குறிப்பாக முதல் 5 ஓவர்கள் முடிவதற்குள் 3 சிக்சர்களை தெறிக்க விட்ட அவர் இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 27 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் சாதனையை உடைத்த ரோகித் சர்மா புதிய உலக சாதனை படைத்தார். இதற்கு முன் 2015 உலகக் கோப்பையில் 26 சிக்ஸர்கள் அடித்திருந்ததே முந்தைய உலக சாதனையாகும்.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகக் கோப்பை வரலாற்றில் 50 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் மற்றும் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற இரட்டை உலக சாதனையும் ரோகித் சர்மா படைத்துள்ளார். இதற்கு முன் உலகக் கோப்பை வரலாற்றில் அதிகபட்சமாக கிறிஸ் கெயில் 49 சிக்ஸர்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் சாதனைகளை படைத்து அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா அரை சதத்தை தொட வேண்டும் என்ற சுயநலமின்றி விளையாடி 4 பவுண்டரி 4 சிக்ஸருடன் 47 (29) ரன்களில் அவுட்டாகி சென்றார்.

இதையும் படிங்க: அரையிறுதி போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி – ரோஹித் சர்மா எடுத்த அதிரடி முடிவு

குறிப்பாக 9 ஓவரிலேயே 71 ரன்கள் என்ற வலுவான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து சொந்த ஊரில் இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்த அவர் ரசிகர்களின் பாராட்டுகளுடன் வெளியேறினார். இதை தொடர்ந்து மறுபுறம் கில் நிதானமாக விளையாடும் நிலையில் விராட் கோலி தன்னுடைய கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் சற்று முன் வரை இந்தியா 10 ஓவர்களில் 79/1 ரன்கள் எடுத்துள்ளது.

Advertisement