இப்டில்லாம் இருந்தா சூப்பர் 4 சுற்றில் ஜெயிக்க முடியுமா? வெற்றி பெற்றும் இந்திய வீரர்களை விளாசிய ரோஹித் – காரணம் என்ன

ROhit Sharma Press
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற 5வது லீக் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நேபாள் 48.2 ஓவரில் போராடி 230 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக துவக்க வீரர் ஆசிப் சேக் 58 எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து சேசிங்கை இந்தியா துவங்கிய போது மழை வந்ததால் 23 ஓவரில் 145 என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதை துரத்திய இந்தியாவை கேப்டன் ரோகித் சர்மா 74* (59) ரன்களும் சுப்மன் கில் 67* (62) ரன்களும் அதிரடியாக எடுத்து 20.1 ஓவரிலேயே எளிதான வெற்றி பெற வைத்தனர். அதனால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் 1 புள்ளியை பெற்றிருந்த இந்தியா இப்போட்டியில் கிடைத்த 2 புள்ளிகளையும் சேர்த்து 3 புள்ளிகளுடன் சூப்பர் குரூப் ஏ புள்ளி பட்டியலில் 2வது இடம் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

ரோஹித் அதிருப்தி:
முன்னதாக கத்துக்குட்டியாக கருதப்படும் நேபாளை இதே தொடரில் பாகிஸ்தான் வெறும் 23.4 ஓவரில் சுருட்டி 238 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது. அதே போல இப்போட்டியில் ஆசிய கண்டத்தின் டாப் அணியாக திகழும் இந்தியா டாஸ் வென்று முதலில் பந்து வீசிய போது தெறிக்க விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆரம்பம் முதலே சராசரியாக பந்து வீசியதால் சிறப்பாக பேட்டிங் செய்த நேபாளை சுருட்டுவதற்கு இந்திய பவுலர்கள் 49 ஓவர்கள் எடுத்துக்கொண்டது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது.

அதை விட முதல் 20 பந்துகளில் நேபாள் துவக்க வீரர்கள் கொடுத்த 3 கேட்ச்களை ஸ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி, இஷான் கிசான் ஆகியோர் கோட்டை விட்டது ரசிகர்களை கடுப்பாக வைத்தது. அதனால் இந்த சுமாரான பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கை வைத்துக் கொண்டு 2023 உலகக்கோப்பையை எப்படி வெல்லப் போகிறீர்கள் என்று ரசிகர்கள் விமர்சித்தனர். இந்நிலையில் இப்போட்டியில் வென்றாலும் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் மோசமாக இருந்ததாக போட்டியின் முடிவில் ரோஹித் சர்மா அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

குறிப்பாக கேட்ச்களை விடுவது போன்ற செயல்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று தெரிவிக்கும் அவர் 2023 உலகக்கோப்பையை வெல்ல அதில் முன்னேற வேண்டும் என இந்திய வீரர்களை போட்டியின் முடிவில் விமர்சித்து பேசியது பின்வருமாறு. “இந்த 2 நாங்கள் அதிகமாக பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை. அதில் மழையால் ரத்து செய்யப்பட்ட ஒன்றில் பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெற்ற நாங்கள் இதில் பந்து வீசும் வாய்ப்பை பெற்றோம். இருப்பினும் நாங்கள் இதுவரை சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தவில்லை”

இதையும் படிங்க: சரவெடி சிக்ஸர்களை பறக்க விட்ட ஹிட்மேன் ரோஹித் சர்மா – ரெய்னாவின் 2 சாதனையை உடைத்து அபாரம் (வீடியோ இணைப்பு)

“சில வீரர்கள் காயத்திலிருந்து வந்துள்ளார்கள். ஆனால் சூப்பர் 4 சுற்றுக்குள் சென்றதும் சாக்கு போக்கு சொல்வதற்கான பேச்சே இருக்கக் கூடாது. முதல் போட்டியில் அழுத்தமான சமயத்தில் பாண்டியா மற்றும் இஷான் எங்களை மீட்டெடுத்தனர். இன்று எங்களுடைய பவுலிங் ஓரளவு சிறப்பாக இருந்தும் ஃபீல்டிங் மோசமாக இருந்தது” என்று கூறினார்.

Advertisement