இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் இந்திய அணியின் நிர்வாகத்தால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தும் விடயமாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. ஏனெனில் சஞ்சு சாம்சன் பலமுறை போராடி வாய்ப்பினை பெற்றாலும் ஒரு சில போட்டிகளிலேயே விளையாட வைக்கப்படும் அவர் உடனே அடுத்த தொடரில் வெளியேற்றப்படுகிறார்.
அப்படி இல்லை என்றாலும் அணியில் சேர்க்கப்படும் அவர் பிளேயிங் லெவனில் விளையாடாமல் பெஞ்சில் அமர வைக்கப்பட்டு வருகிறார். தனது 21-வது வயதில் 2015-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகிய சஞ்சு சாம்சன் அதன் பிறகு 6 ஆண்டுகள் காத்திருந்து 2021-ல் தான் இரண்டாவது வாய்ப்பை பெற்றார்.
தற்போது 28 வயதாகும் அவர் 11 ஒருநாள் போட்டிகள் மற்றும் 17 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். இப்படி மிகச் சிறப்பான ஒரு வீரருக்கு குறைந்த அளவே வாய்ப்பை கொடுப்பது தவறு என்றும் அவருக்கு போதிய அளவு வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என்றும் பலரும் கூறி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா தற்போது சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் : ரிஷப் பண்ட் ஒருநாள் கிரிக்கெட்-க்கு திரும்ப இன்னும் காலமாகும் என்பதனால் கே.எல் ராகுலை ஐந்தாவது இடத்தில் களம் இறக்கலாம். அதோடு அவரை விக்கெட் கீப்பராகவும் விளையாட வைக்கலாம். ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட்டில் கே.எல் ராகுல் ஐந்தாவது இடத்தில் 50 சராசரிக்கு மேல் ரன்களை குவித்துள்ளார்.
எனவே நிச்சயம் அந்த இடம் அவருக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதன் காரணமாக ராகுலை ஐந்தாவது இடத்தில் விளையாட வைத்து அவரை கீப்பராகவும் செயல்படுத்தினால் அது இந்திய அணிக்கு பலம்தான். அதேபோன்று சஞ்சு சாம்சன் 100 சதவீதம் இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாட வேண்டிய ஒரு வீரர். சஞ்சு சாம்சன் நிறைய திறன்கள் உடைய ஒரு அற்புதமான பிளேயர்.
இதையும் படிங்க : தோத்துடுவோம்னு பயமா? எங்க ஊர்க்கு வரலைனா அப்றம் நரகத்த பாப்பிங்க – இந்தியாவுக்கு முன்னாள் பாக் வீரர் பகிரங்க எச்சரிக்கை
அவர் நீண்ட காலம் இந்திய அணிக்காக விளையாட வேண்டிய ஒருவர். அவருக்கு நிறைய வாய்ப்புகளை வழங்க வேண்டும். மூன்றாவது இடத்தில் நிச்சயம் அவரை விளையாட வைத்து பார்க்கலாம். குறைந்தது அவருக்கு ஐந்து வாய்ப்பாவது கொடுத்தால் நிச்சயம் அவர் பெரிய அளவில் தனது திறனை நிரூபித்து காட்டுவார் என்று ராபின் உத்தப்பா கூறியது குறிப்பிடத்தக்கது.