- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வீடியோ : இந்த பயணம் தோனி போனதால கிடைச்சுது, டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் பற்றி – அஸ்வின், ரோஹித் கருத்து

டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி வரும் ஜூன் 7 முதல் 11 வரை புகழ் பெற்ற லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அதற்காக கடந்த 2021 முதல் நடைபெற்று வந்த லீக் சுற்றின் முடிவில் சிறப்பாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியாவை 2வது இடம் பிடித்த இந்தியா எதிர்கொள்கிறது. கடந்த ஃபைனலில் நியூசிலாந்திடம் விராட் கோலி தலைமையில் தோல்வியை சந்தித்த இந்தியா இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் சாம்பியன் பட்டம் வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக 2010ஆம் ஆண்டு டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவை வரலாற்றில் முதல் முறையாக நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேற்றிய எம்எஸ் தோனி தலைமையில் விளையாடிய சச்சின், டிராவிட், லக்ஷ்மன் போன்ற ஜாம்பவான்கள் 2012க்குப்பின் ஓய்வு பெற துவங்கினர். அதனால் ட்ரான்சிசன் எனப்படும் அடுத்த இளம் தலைமுறையை நோக்கிய நகர்வு அவரது தலைமையில் நடந்ததால் 2013, 2014 காலகட்டங்களில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்தடுத்த ஒயிட்வாஷ் தோல்விகளை சந்தித்த இந்தியா 7வது இடத்துக்கு சரிந்தது. அப்போது வருங்காலத்தை கருத்தில் கொண்டு தமது வெள்ளைப்பந்து கேரியரை நீட்டிக்க முடிவெடுத்த தோனி உடனடியாக ஓய்வு பெற்றதை தொடர்ந்து விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்றார்.

- Advertisement -

தோனி போனதால்:
அப்போதிலிருந்து தனது ஆக்ரோஷமான கேப்டன்ஷிப் வாயிலாக சொந்த மண்ணில் மட்டும் வெல்லும் அணியாக இருந்த இந்தியாவை வெளிநாடுகளில் மிரட்டும் அணியாக மாற்றிய அவர் 2016 – 2021 வரை தொடர்ந்து நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். அந்த வெற்றிப்பாதையில் கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் முதல் அணியாக தகுதி பெற்ற இந்தியா இம்முறையும் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படி அடுத்தடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ள இந்தியாவின் இந்த வெற்றி நடை 2014இல் தோனி ஓய்வு பெற்ற போது துவங்கியதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். இது பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் பெரிய திருப்ப முனை 2014இல் துவங்கியது. அந்த சமயத்தில் தோனி ஓய்வு பெற்ற நிலையில் நாங்கள் அனைவரும் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தோம். அப்போது அனுபவமில்லாத நாங்கள் எங்களுடைய சொந்த பயணத்தை துவங்கினோம்”

- Advertisement -

“பொதுவாக சீனியர்கள் இல்லாமல் விளையாடுவது கடினமாகும். ஆனால் நாங்கள் அனைவரும் சேர்ந்து கடினமான உழைப்பை போட்டு கடந்த 2 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு அடுத்தடுத்து தகுதி பெற்றுள்ளோம். சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில் 3 – 1 அல்லது 3 – 0 என்ற கணக்கில் வெற்றியை பதிவு செய்யவில்லை என்றாலும் நாங்கள் விளையாடிய சிறந்த கிரிக்கெட்டுக்கு இந்த ஃபைனல் பரிசாக கிடைத்துள்ளது” என்று கூறினார். மேலும் இந்த ஃபைனலில் விளையாடுவது பற்றி கேப்டன் ரோகித் சர்மா பேசியது பின்வருமாறு.

“2021 ஃபைனலில் தோல்வியை சந்தித்ததும் நாங்கள் உடனடியாக அடுத்த தொடருக்கு தயாரானோம். இந்தத் தொடரில் நாங்கள் சில கடினமான கிரிக்கெட்டை விளையாடினோம் என்று நினைக்கிறேன். அதில் நிறைய சவாலை சந்தித்தும் நாங்கள் அதிலிருந்து வெளியே வந்து வெற்றிக்காக போராடும் குணத்தை காட்டினோம். இந்த காலகட்டத்தில் நாங்கள் நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாடினோம். அந்த போட்டிகளில் நிறைய வீரர்கள் தனிப்பட்ட முறையிலும் அணியாகவும் சிறப்பாக செயல்பட்டனர்” என்று கூறினார்.

இதையும் படிங்க:IPL 2023 : அதிக கோப்பை போலவே நாக் அவுட் கிங்கும் நாங்க தான் – சிஎஸ்கே’வின் 11 வருட சாதனையை தூளாக்கிய மும்பை

இந்த ஃபைனல் பற்றி புஜாரா பேசியது பின்வருமாறு. “இந்திய அணியின் வெற்றிகளில் பல வீரர்கள் பங்காற்றியுள்ளனர். இம்முறை ஓவலில் நடைபெறும் ஃபைனலில் வெற்றி காண்பதற்கு அணி நிர்வாகம், கேப்டன் உட்பட அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம். சமீப காலங்களில் இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நாங்கள் மறக்க முடியாத வெற்றிகளை பெற்றுள்ளோம். மொத்தத்தில் கடந்த சில வருடங்கள் இந்திய டெஸ்ட் அணியில் சிறந்த பயணமாக அமைந்து வருகிறது” என்று கூறினார்.

- Advertisement -