87 ரன் அடிச்சது மேட்டர் இல்ல. ரோஹித் சர்மாவின் இந்த பயமற்ற முடிவே வெற்றிக்கு காரணம் – ரவி சாஸ்திரி பாராட்டு

Ravi-Shastri-and-Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 29-ஆவது லீக் போட்டியானது நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி ஏற்கனவே இந்த தொடரில் 5 போட்டிகளில் நான்கு தோல்விகளை சந்தித்த வேளையில் நேற்றைய இந்திய அணிக்கு எதிரான போட்டி அவர்களுக்கு மிக முக்கியமான போட்டியாக அமைந்தது. இருப்பினும் இந்த போட்டியிலும் 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து அணி கிட்டத்தட்ட இந்த உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி வாய்ப்பை இழந்தது என்றே கூறலாம்.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இங்கிலாந்து அணி இந்திய அணியை 229 ரன்களில் சுருட்டியது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக அணியின் கேப்டன் ரோகித் சர்மா 101 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 87 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி ஓரளவு டீசன்டான ரன் குவிப்பை வழங்கியது.

- Advertisement -

பின்னர் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது எளிதில் இந்திய அணியை வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மைதானத்தின் தன்மை காரணமாகவும், இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சு காரணமாகவும் அவர்களால் 34.5 ஓவர்களில் 129 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இதன் காரணமாக இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்த தொடரில் தங்களது தொடர்ச்சியான ஆறாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் முன்னேறியது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக ரோகித் சர்மாவின் சிறப்பான பேட்டிங்கே காரணம் என்று அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஆனால் நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா பேட்டிங்கில் அடித்த 87 ரன்களை விட கேப்டன்சியில் பயமற்று எடுத்த முடிவுகளே வெற்றிக்கு காரணம் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்த தொடர் முழுவதுமே ரோகித் சர்மா பேட்டிங்கில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் அதையும் தாண்டி ஒரு கேப்டனாக அவர் மிகவும் அமைதியாகவும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிறப்பான முடிவுகளை எடுத்து வருகிறார். அதிலும் குறிப்பாக நேற்று நடைபெற்ற இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலக்கு குறைவாக இருந்தாலும் ரோகித் சர்மா பந்துவீச்சாளர்களை சரியான முறையில் பயன்படுத்தி இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

குறிப்பாக எந்த ஒரு பவுலருக்குமே நீண்ட ஸ்பெல்லை வழங்காமல் சரியான நேரத்தில் பயமற்ற முடிவுகளை எடுத்து பந்துவீச்சாளர்களை சுழற்சி முறையில் பந்துவீச வைத்து அவர் தன்னை சிறந்த கேப்டனாக வெளிக்காட்டி உள்ளார். குறிப்பாக முகமது ஷமி, குல்தீப் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோரை சரியான முறையில் பயன்படுத்தி இங்கிலாந்து அணியின் வீரர்களை செட்டிலாக விடாமல் சீரான இடைவெளியில் அவர்களது விக்கெட்டுகளை கைப்பற்ற காரணமாக அமைந்தார். இங்கிலாந்து அணியின் வீரர்கள் எந்த மாதிரி ஆட்டத்தை விளையாடுவார்கள் என்பதை முன்கூட்டியே கணித்து அதற்கு ஏற்றவாறு பீல்டிங் திட்டங்களை அமைத்த ரோகித் சர்மா சரியான பந்துவீச்சாளர்களை பந்துவீச வைத்து அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கினார்.

இதையும் படிங்க : கோப்பை வெல்ல அந்த 2 சவாலான டீமை சாய்க்கணும்.. இந்தியாவுக்கு பாராட்டுடன் கங்குலி எச்சரிக்கை

அதே போன்று சரியான நேரத்தில் பவுலர்களை மாற்றம் செய்து விக்கெட்டுகள் விழவும் ரோஹித் சர்மா காரணமாக அமைந்தார் என ரவி சாஸ்திரி பாராட்டியிருந்தார். அதேபோன்று இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறுகையில் : ரோகித் சர்மா டாசில் தோற்று பேட்டிங்கை தேர்வு செய்து ஓரளவு சிறப்பாக ரன் குவித்து இருந்தாலும், ஒரு கேப்டனாக இரண்டாம் பாதியில் பந்துவீச்சாளர்களை மிக அற்புதமாக கையாண்டு வெற்றியை பரிசாக கொண்டு வந்துள்ளார் என பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement