- Advertisement -
ஐ.பி.எல்

19வது ஓவரில் வெறும் 3 ரன்ஸ்.. தோனியை அடக்கிய என்னோட திட்டம் இது தான்.. ராகுல் சஹர் பேட்டி

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 49வது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னையை 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. அதனால் 10 போட்டிகளில் 4வது வெற்றியை பதிவு செய்த பஞ்சாப் பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. மறுபுறம் 10 போட்டிகளில் 5வது தோல்வியை பதிவு செய்த சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல எஞ்சிய போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

சேப்பாக்கத்தில் மே ஒன்றாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சுமாராக விளையாடி 162/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 62 ரன்கள் எடுத்த நிலையில் பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ஹர்ப்ரீத் பரர், ராகுல் சஹர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 163 ரன்களை துரத்திய பஞ்சாப்புக்கு அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ 46, ரிலீ ரோசவ் 43, கேப்டன் கரண் 26* ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

தோனிக்கு எதிராக:
அதனால் 17.5 ஓவரிலேயே பஞ்சாப் எளிதாக வெற்றி பெற்றது. மறுபுறம் வெற்றிக்கு போராடுவதற்கு தேவையான ரன்களை பேட்டிங்கில் எடுக்கத் தவறிய சென்னை தன்னுடைய சொந்த ஊரில் பரிதாபமாக தோற்றது. பஞ்சாப் அணியின் இந்த வெற்றியில் தீபக் சஹரின் சகோதரர் ராகுல் சஹர் 4 ஓவரில் 16 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினார்.

குறிப்பாக மிகவும் கடினமான 19வது ஓவரில் மொய்ன் அலி விக்கெட்டை எடுத்த அவர் முரட்டுத்தனமான ஃபார்மில் இருக்கும் தோனிக்கு எதிராக ஒரு பவுண்டரி கூட கொடுக்காமல் வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தது பஞ்சாப்பின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் தோனிக்கு எதிராக ஸ்லாட்டில் பந்து வீசுவதை தவிர்த்ததாக ராகுல் சஹர் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “பனி இல்லாத போது பிட்ச்சில் கொஞ்சம் பிடிப்பு இருந்தது. அது போன்ற சூழ்நிலையில் வேகமாக வீசினால் பேட்ஸ்மேன்களால் அடிக்க முடியாது என்பது எனக்கு தெரியும். 19வது ஓவரில் நல்ல பந்தை வீசினால் யாராக இருந்தாலும் நம்மை அடிக்க முடியாது என்ற தன்னம்பிக்கையுடன் நான் பந்து வீசினேன். தோனிக்கு எதிராக ஸ்லாட்டில் பந்து வீசுவதை நான் தவிர்த்தேன்”

“ஒருவேளை அங்கே நீங்கள் வீசினால் பந்து மைதானத்திற்கு வெளியே பறக்கும் என்பது உங்களுக்கு தெரியும். எனவே எதிர்கொள்ள முடியாத அளவுக்கு அவருடைய பக்கத்தில் நான் வீசவில்லை. அந்த வகையில் இது என்னுடைய சிறந்த பந்து வீச்சில் ஒன்று. சிஎஸ்கே அணிக்கு எதிராக கடந்த முறையும் நான் இதே போல அசத்தினேன். எனவே மீண்டும் சிஎஸ்கே அணிக்கு எதிராக நான் நன்றாக செயல்பட்டுள்ளேன்” என்று கூறினார்.

- Advertisement -