ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் ஏப்ரல் 18ஆம் தேதி 34வது போட்டி நடைபெற்றது. மழையால் தாமதமாக துவங்கியிருந்த போட்டி இருதரப்புக்கும் 14 ஓவராக குறைக்கப்பட்டது. அந்த சூழ்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு பில் சால்ட் 4, விராட் கோலி 1, கேப்டன் ரஜத் படிதார் 23, லியாம் லிவிங்ஸ்டன் 4, ஜிதேஷ் சர்மா 2, க்ருனால் பாண்டியா 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
அதனால் 50 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு அணிக்கு அதிகபட்சமாக கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய டிம் டேவிட் 50* (26) ரன்கள் விளாசி அசத்தினார். பஞ்சாப்புக்கு அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 2, மார்கோ யான்சென் 2, சஹால் 2, ப்ரார் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அடுத்து களமிறங்கிய பஞ்சாப்புக்கு பிரியான்ஸ் ஆர்யா 16, பிரப்சிம்ரன் 13 ரன்கள் அடித்தனர்.
பஞ்சாப் வெற்றி:
மிடில் ஆர்டரில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 7, ஜோஸ் இங்லிஷ் 14, சசாங் சிங் 1 ரன்னில் அவுட்டானார்கள். இருப்பினும் நேஹல் வதேரா அதிரடியாக விளையாடி 33* (19) ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் 7* (2) ரன்கள் எடுத்ததால் 12.1 ஓவரிலேயே 98/5 ரன்களை எடுத்த பஞ்சாப் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதையும் சேர்த்து 7 போட்டிகளில் 5வது வெற்றியைப் பெற்ற பஞ்சாப் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. மறுபுறம் பெங்களூரு அணி 7 போட்டிகளில் 3வது தோல்வியைப் பதிவு செய்தது. ஆச்சரியப்படும் வகையில் அந்த 3 தோல்விகளையும் தங்களது சொந்த ஊரில் இருக்கும் சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு பதிவு செய்துள்ளது.
தொடரும் தோல்விகள்:
இந்த 3 தோல்விகளையும் சேர்த்து எம் சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு அணி ஐபிஎல் வரலாற்றில் மொத்தமாக 46 தோல்விகளை பதிவு செய்துள்ளது. அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் அதிக தோல்விகளை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை மீண்டும் பெங்களூரு தன் வசமாக்கியுள்ளது. இதற்கு முன் டெல்லி அணி தங்களுடைய சொந்த ஊரில் இருக்கும் மைதானத்தில் 45 தோல்விகள் சந்தித்ததே முந்தைய சாதனை.
இதையும் படிங்க: கைவிரித்த கம்பீர்.. குற்றச்சாட்டு கூறிய ரோஹித் மற்றும் கோலி.. அபிஷேக் நாயர் நீக்கத்திற்கு – பின்னால் இருக்கும் காரணம்
இந்த வருடம் சொந்த ஊரில் ஒரு வெற்றியைக் கூட பெறாத அணி என்ற பரிதாப பெருமையையும் பெங்களூரு தன் வசம் வைத்துள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 2, ஜோஸ் ஹேசல்வுட் 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். இது ஆர்சிபி ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.



