அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 7ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெற்ற 51வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதில் கேஎல் ராகுல் காயத்தை சந்தித்து வெளியேறியதால் லக்னோ அணியின் கேப்டனாக க்ருனால் பாண்டியா விளையாடிய நிலையில் குஜராத்தின் கேப்டனாக வழக்கம் போல ஹர்திக் பாண்டியா செயல்பட்டார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியின் 2 அணிகளையும் எதிரெதிரே கேப்டனாக வழி நடத்திய முதல் சகோதரர்கள் என்ற தனித்துவமான சாதனையையும் பெயரையும் பாண்டிய சகோதரர்கள் படைத்தனர்.
சொல்லப்போனால் பிஎஸ்எல், பிபிஎல், எல்பிஎல் என பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய ஆசிய நாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களில் கூட இது போன்ற நிகழ்வு அரங்கேறியதில்லை. வரலாற்றில் இதற்கு முன் 2015/16 பிக்பேஷ் லீக் தொடரில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் ஹசி மற்றும் மைக்கேல் ஹசி ஆகிய சகோதரர்கள் முதல் முறையாக மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் சிட்னி தண்டர்ஸ் ஆகிய அணிகளின் கேப்டனாக செயல்பட்டு அந்த தனித்துவமான சாதனையை படைத்தனர். அவர்களைத் தொடர்ந்து தற்போது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் தான் பாண்டியா சகோதரர்கள் இந்த தனித்துவமான பெயரை வரலாற்றில் பொறுத்துள்ளனர்.
நெகிழ்ச்சி பேட்டி:
குறிப்பாக இதற்கு முன் பதான் சகோதரர்கள், ஹசி சகோதரர்கள் போன்ற இந்திய மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சகோதர வீரர்கள் கேப்டனாக இல்லாமல் சாதாரண வீரர்களாகவே விளையாடுகின்றனர். குஜராத்தைச் சேர்ந்த பாண்டியா சகோதரர்கள் ஏழை குடும்பத்தில் பிறந்து கிரிக்கெட்டில் இருக்கும் காதலால் உள்ளூர் போட்டிகளில் விளையாட துவங்கி கிளப் அளவில் 200, 500 ரூபாய்களை சம்பாதித்து தனது தந்தைக்கும் உதவி செய்தனர். அந்த நிலையில் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வாங்கப்பட்ட அவர்கள் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி நட்சத்திரங்களாக உருவெடுத்தனர்.
The two Pandya brothers are up against one another here in Ahmedabad.
Who do you reckon will come on Top after Match 51 of the #TATAIPL #GTvLSG pic.twitter.com/Zvh2kRRjwN
— IndianPremierLeague (@IPL) May 7, 2023
அதில் சிறப்பாக செயல்பட்டதால் இந்தியாவுக்காகவும் விளையாடிய அவர்களில் ஹர்திக் பாண்டியா தற்போது உலக அளவில் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக செயல்பட்டு வருகிறார். அதே போல் இந்திய அணியில் நிலையான இடத்தைப் பிடிக்க முடியவில்லை என்றாலும் ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களில் க்ருனால் பாண்டியா முதன்மை வீரராக விளையாடுகிறார். தற்போது எதிரெதிர் அணிகளில் கேப்டனாக இந்த போட்டி துவங்குவதற்கு முன்பாக க்ருனால் பாண்டியாவின் தொப்பியையும் ஜெர்சியையும் சரி செய்து பாசத்தை பொழிந்த ஹர்திக் பாண்டியா கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தினார்.
அதைத்தொடர்ந்து துவங்கிய போட்டியில் டாஸ் வீசும் போது சமீபத்தில் மறைந்த தங்களுடைய தந்தை நிச்சயமாக எங்களைப் பார்த்து பெருமைப்படுவார் என்று ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியுடன் பேசியது பின்வருமாறு. “நிச்சயமாக இது எங்களுக்கு மிகவும் உணர்ச்சி பூர்வமான நாளாகும். எங்களுடைய தந்தை இதைப் பார்த்து மிகவும் பெருமையுடையவராக இருந்திருப்பார். இந்த உயரத்தை நாங்கள் எட்ட வேண்டும் என்று தான் அவர் மிகப்பெரிய கனவு கண்டார்”
“இந்த தருணத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லாமல் நான் தவிக்கிறேன். எங்களுடைய குடும்பமும் தற்போது உணர்ச்சிபூர்வமாக உள்ளது. இருப்பினும் எங்களுடைய குடும்பம் ஒரே சமயத்தில் எங்கள் இருவருக்கும் ஆதரவு கொடுக்க முடியாது. ஆனால் இந்த போட்டியின் முடிவில் நிச்சயமாக ஒரு பாண்டியா வெற்றியை பெறுவார்” என்று கூறினார்.
இதையும் படிங்க: IPL 2023 : ஐ.பி.எல் வரலாற்றின் மோசமான சாதனை பட்டியலில் முதலிடத்திற்கு சென்ற ரோஹித் சர்மா – விவரம் இதோ
அதை தொடர்ந்து துவங்கிய போட்டியில் டாஸ் வென்ற க்ருனால் பாண்டியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் லக்னோவுக்கு கருணை காட்டாமல் அடித்து நொறுக்கி 20 ஓவர்களில் 227 ரன்கள் குவித்து தங்களுடைய அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது.