TNPL 2023 : ஒரே ஓவரில் 5 சிக்சர், கடைசி பந்தில் மிரட்டிய ஈஸ்வரன், வெய்ட்டான திண்டுக்கலை சாய்த்து – நெல்லை ஃபைனல் சென்றது எப்படி

- Advertisement -

தமிழகத்தில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஜூலை 10ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு திருநெல்வேலியில் இருக்கும் இந்தியா சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் நடைபெற்ற குவாலிபயர் 2 போட்டியில் புள்ளி பட்டியலில் 2வது இடம் பிடித்து குவாலிபயர் 1 போட்டியில் நடப்பு சாம்பியன் கோவையிடம் தோல்வியை சந்தித்த திண்டுக்கல்லை புள்ளி பட்டியலில் 4வது இடம் பிடித்து எலிமினேட்டரில் மதுரை வீட்டுக்கு அனுப்பி வைத்த நெல்லை எதிர்கொண்டது.

அந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற நெல்லை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய திண்டுக்கல் அணிக்கு விமல் குமார் 16 (15) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் அடுத்து வந்த பூபதி குமார் மற்றொரு தொடக்க வீரர் சிவம் சிங் உடன் இணைந்து அதிரடியாக விளையாடினார்.

- Advertisement -

கடைசி பந்தில் மிரட்டல்:
குறிப்பாக 5வது ஓவரில் ஜோடி சேர்ந்து 14 ஓவர்கள் வரை நிலைத்து நின்று நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்ட இந்த ஜோடியில் சிவம் சிங் அரை சதம் கடந்த நிலையில் எதிர்ப்புறம் சிறப்பாக செயல்பட்ட பூபதி குமார் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 41 (18) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் அசத்திய சிவம் சிங்கும் 4 பவுண்டரி 6 சிக்ஸருடன் 76 (46) ரன்கள் குவித்து அவுட்டானார்.

இறுதியில் ஆதித்யா கணேஷ் 13 (14) சரத் குமார் 9 (7) கேப்டன் பாபா இந்திரஜித் 13* (5) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவர்களில் திண்டுக்கல் 185/5 ரன்கள் எடுக்க நெல்லை சார்பில் அதிகபட்சமாக சோனு யாதவ் 2 விக்கெட்டுகள் சாய்ந்தார். அதைத் தொடர்ந்து 186 ரன்களை துரத்திய நெல்லைக்கு கேப்டன் அருண் கார்த்திக் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 26 (15) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்து அஜித்தேஷ் குருசாமி அதிரடியாக விளையாடினார்.

- Advertisement -

இருப்பினும் மறுபுறம் தடுமாறிய மற்றொரு தொடக்க வீரர் சுகேந்திரன் 22 (24) ரன்களில் வருண் சக்கரவர்த்தி சுழலில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த நிதீஷ் ராஜகோபால் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில் மறுபுறம் இந்த சீசனில் ஏற்கனவே சதமடித்து நல்ல ஃபார்மில் இருக்கும் குருசாமி அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்து வெற்றிக்கு போராடினார். ஆனால் எதிர்ப்புறம் நித்திஷ் ராஜகோபால் அதிரடியாக விளையாட தடுமாறியதால் ரன் ரேட் அதிகரித்து அதிகப்படியான அழுத்தம் ஏற்பட்டது.

எனவே அதை சமாளிப்பதற்காக அணியின் நலன் கருதி 26 (27) ரன்களில் நித்திஷ் ராஜகோபால் ரிட்டையர் அவுட்டாகி சென்றது போட்டியில் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. ஏனெனில் அந்த சமயத்தில் கடைசி 21 பந்துகளில் நெல்லையின் வெற்றிக்கு 57 ரன்கள் தேவைப்பட்டதால் திண்டுக்கல் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் களமிறங்கிய ரித்திக் ஈஸ்வரன் முதல் பந்திலிருந்தே முரட்டுத்தனமான சிக்சர்களை அடித்து திருப்பு முனையை உண்டாக்கினார்

- Advertisement -

குறிப்பாக கிஷோர் வீசிய 19வது ஓவரில் 6, 6, 6, 1 என முதல் 4 பந்துகளில் அதிரடியாக 19 ரன்கள் எடுத்த அவருக்கு 5வது பந்தில் குருசாமி சிக்ஸர் அடித்து கிஷோர் வீசிய கடைசி நோபால் பந்தில் ஸ்ட்ரைக் மாற்றினார். அதனால் கடைசி பந்திலும் சிக்ஸர் பறக்க விட்ட ஈஸ்வரன் போட்டியை மொத்தமாக மாற்றினார். அதன் காரணமாக கடைசி ஓவரில் வெறும் 4 ரன்கள் தேவைப்பட்டது போது சுபோத் பாத்தி 1, 1, 0, 0, 1 என முதல் 5 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து சவாலை கொடுத்தார்.

அதனால் கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்ட போது மீண்டும் சிக்ஸரை பறக்க விட்ட ஈஸ்வரன் 39* (11) ரன்களுடன் மிரட்டல் ஃபினிஷிங் கொடுத்து நெல்லையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். அதன் காரணமாக ஸ்ரீனிவாஸ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தும் திண்டுக்கல் இத்தொடரிலிருந்து வெளியேறியது.

இதையும் படிங்க:தனது முதல் தமிழ் திரைப்பட இசைவெளியீட்டு விழாவில் தோனி பேசியது என்ன? – அரங்கை அசரவைத்த தோனியின் பேச்சு

இந்த வெற்றிக்கு 5 பவுண்டரி 5 சிக்சருடன் 73* (44) ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய குருசாமி ஆட்டநாயகன் விருதை வென்றார். இதைத்தொடர்ந்து ஜூலை 12ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸை கோப்பைக்காக நெல்லை ராயல் கிங்ஸ் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.

Advertisement