IND vs AUS : முரளிதரன், வார்னேவை விட அவர் தான் இந்தியாவில் நம்பர் ஒன் வெளிநாட்டு பவுலர் – ஆஸி பவுலரை பாராட்டும் ரோஹித் சர்மா

Rohit Press
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்த ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டு 2004க்குப்பின் இந்திய மண்ணில் தொடரை வெல்லும் வாய்ப்பையும் நழுவ விட்டு 2017, 2018/19, 2020/21, 2023* ஆகிய அடுத்தடுத்த 4 தொடர்களில் தொடர்ந்து தோற்ற முதல் அணியாக மோசமான சாதனை படைத்தது. அந்த நிலையில் இந்தூரில் நடைபெற்ற 2வது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் முதல் நாளிலேயே சுழலத் துவங்கிய பிட்ச்சில் கச்சிதமாக செயல்பட்டு 109, 163 ரன்களுக்கு இந்தியாவை துவம்சம் செய்த ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பதிலடி கொடுத்துள்ளது.

Nathan-Lyon-1

- Advertisement -

அதனால் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்துள்ள ஆஸ்திரேலியா தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்சிப் ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. அந்த வெற்றிக்கு மொத்தம் 11 விக்கெட்டுகளை எடுத்த நேதன் லயன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். கடந்த 2011இல் அறிமுகமாகி சுழலுக்கு சாதகமில்லாத ஆஸ்திரேலியா மைதானங்களிலும் வெற்றிகரமாக செயல்பட்டு ஷேன் வார்னேவுக்கு பின் முதன்மை ஸ்பின்னராக விளையாடி வரும் அவர் 450க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

நம்பர் ஒன்:
குறிப்பாக 2014 முதல் விராட் கோலி, புஜாரா உள்ளிட்ட தரமான இந்திய பேட்ஸ்மேன்களை அதிக முறை அவுட்டாக்கி சவாலை கொடுத்து வரும் அவர் பார்டர் – கவாஸ்கர் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர், ஆசிய கண்டத்தில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த வெளிநாட்டு பவுலர், இந்தியாவில் அதிக விக்கெட்களை எடுத்த ஆஸ்திரேலிய பவுலர் போன்ற பல வரலாற்றுச் சாதனைகளை சமீபத்தில் படைத்து ஜாம்பவானாக போற்றுவதற்கு நிகராக அசத்தி வருகிறார். இந்நிலையில் முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே போன்றவர்களை எதிர்கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அவர்களுக்கு நிகராக நேதன் லயன் இந்திய மண்ணில் நம்பர் ஒன் வெளிநாட்டு பவுலராக வருவதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

Nathan Lyon

இது பற்றி 3வது போட்டிக்கு பின் அவர் பேசியது பின்வருமாறு. “என்னை பொறுத்த வரை அவர் டாப் இடத்தில் இருக்க வேண்டும். முரளிதரன் அல்லது வார்னே ஆகியோருக்கு எதிராக நான் விளையாடியதில்லை. இருப்பினும் தற்சமயத்தில் இருக்கும் பவுலர்களில் நேதன் லயன் இந்திய மண்ணில் எங்களுக்கு சவாலை கொடுக்கும் நம்பர் ஒன் பவுலர் என்று தாராளமாக சொல்லலாம். அவர் தன்னுடைய லைன் மற்றும் லென்த்தில் தொடர்ந்து ஒரே மாதிரியாக செயல்படுகிறார்”

- Advertisement -

“அவரைப் போன்ற துல்லியமாக செயல்படும் ஒருவருக்கு எதிராக ரன்களை அடிக்க நீங்கள் வித்தியாசமாக செயல்பட வேண்டும். ஏனெனில் அவர் உங்களுக்கு எளிதாக எதையும் கொடுக்க மாட்டார் இது அவருடைய 3வது இந்திய சுற்றுப்பயணமாகும். முதல் சுற்றுப்பயணத்தில் நான் இந்திய அணியில் இல்லை. இருப்பினும் அவர் விளையாடிய போட்டிகளை நான் பார்த்தேன். மிகவும் அனுபவமிக்க பவுலரான அவர் தன்னை எதிரணி பேட்ஸ்மேன்கள் அவ்வப்போது அடிப்பதை நினைத்து கவலைப்படுவதில்லை”

Rohit-Sharma

“அவரைப் போன்ற வீரர் இருப்பது கேப்டனுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கை ஏற்படுத்தும். ஏனெனில் அவருக்கு பந்தை எங்கே பிட்ச் செய்ய வேண்டும் பிட்ச்சை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தெரியும் என்பதை கேப்டன் அறிவார்” என்று கூறினார். முன்னதாக இந்த தொடரில் ரோஹித் சர்மாவை நிறைய தருணங்களில் அவுட்டாக்கிய நேதன் லயன் புஜாராவை தனது கேரியரில் மொத்தமாக 13 முறை அவுட் செய்துள்ளார்.

இதையும் படிங்க:மகளிர் ஐபிஎல் 2023 : முதல் போட்டியிலேயே அதானி குஜராத் அணி பித்தலாட்டம், வெ.இ வீராங்கனை வேதனை – விளாசும் ரசிகர்கள்

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இந்திய வீரரை அதிக முறை அவுட்டாக்கிய பவுலர் என்ற தனித்துவமான சாதனையும் அவர் படைத்தார். அப்படி ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா உள்ளிட்ட பெரும்பாலான இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நேதன் லயன் சவாலாக இருந்து வருகிறார் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement