அவமானம், விமர்சனம் ! மும்மடங்கு பார்முக்கு திரும்பி மொத்தமாய் திருப்பி அடிக்கும் நட்சத்திர வீரர் – முழு விவரம்

Kuldeep Yadhav DC
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெற்ற 32-வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய அணிகள் மோதின. மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப்க்கு காயத்திலிருந்து குணமடைந்தது திரும்பிய கேப்டன் மயங்க் அகர்வால் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் முதல் ஒருசில ஓவர்களுக்குப்பின் டெல்லியின் மாயாஜால சுழல் பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாத அந்த அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 115 ரன்களுக்கு சுருண்டு இந்த வருட ஐபிஎல் தொடரின் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

சொதப்பிய பஞ்சாப்:
அந்த அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் அதிரடியாக 15 பந்துகளில் 4 பவுண்டரி உட்பட 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்ததாக ஷிகர் தவான் 9 (10), ஜானி பேர்ஸ்டோ 9 (8), லியம் லிவிங்ஸ்டன் 2 (3) என முக்கிய வீரர்கள் அனைவரும் வரிசையாக அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். நடுவரிசையில் அதிரடியாக விளையாடிய இளம் வீரர் ஜிதேஷ் சர்மா 5 பவுண்டரிகள் உட்பட 32 (23) ரன்கள் எடுக்க அடுத்து வந்த சாருக்கான் உள்ளிட்ட அனைத்து வீரர்களும் வந்த வாக்கிலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி பஞ்சாப்புக்கு பின்னடைவை கொடுத்தனர்.

- Advertisement -

மறுபுறம் மிகத் துல்லியமாகவும் தரமாகவும் பந்து வீசிய டெல்லி சார்பில் அதிகபட்சமாக லலித் யாதவ், கலில் அகமது, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகிய 4 பவுலர்கள் ஒன்றாக சேர்ந்து பஞ்சாப்பை பதம் பார்த்து தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதை தொடர்ந்து 116 என்ற சுலபமான இலக்கை துரத்திய டெல்லிக்கு தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் பிரிதிவி ஷா ஆகியோர் ஆரம்பம் முதலே பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பட்டாசாக பறக்கவிட்டனர்.

டெல்லி வெற்றி:
ஏற்கனவே பேட்டிங்கில் சொதப்பி குறைந்த ரன்களை எடுத்து விட்டோமே என்ற சோர்வில் பந்து வீசிய பஞ்சாப்க்கு கொஞ்சம் கூட கருணை காட்டாத இந்த ஜோடி அதிரடியாக ரன்களை குவித்து முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்தது. இதில் 20 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 41 ரன்கள் எடுத்து பிரித்வி ஷா அவுட்டாக மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் பஞ்சாப் பவுலர்களை புரட்டி எடுத்து பிரித்து மேய்ந்த டேவிட் வார்னர் வெறும் 30 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 60* ரன்கள் எடுத்து மிரட்டலான பினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

இதனால் 10.3 ஓவர்களிலேயே 119/1 ரன்கள் எடுத்தவன் டெல்லி அதிரடியான வெற்றியை பதிவு செய்தது. இதனால் இந்த வருடம் பங்கேற்ற 6 போட்டிகளில் 3-வது வெற்றியை பதிவு செய்த அந்த அணி அதே 6 புள்ளிகளைப் பெற்றுள்ள கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய அணிகளை காட்டிலும் கூடுதல் ரன் ரேட்டை பெற்று புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

மும்முனை பார்மில் குல்டீப் யாதவ்:
இந்த சிறப்பான வெற்றிக்கு டெல்லியை சேர்ந்த 4 பவுலர்கள் சமமாக 2 விக்கெட்டுகளை எடுத்ததால் யாருக்கு ஆட்டநாயகன் விருது கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் சமீப காலங்களாக கடும் அவமானத்திற்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகி தற்போது மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ள குல்தீப் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. கடந்த 2017 – 2019 ஆகிய காலகட்டங்களில் இந்தியாவிற்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் முன்னணி பவுலராக வலம் வந்த அவர் கடந்த 2020இல் கொல்கத்தா அணியில் சுமாராக பந்துவீசி பார்மை இழந்த காரணத்தால் காரணத்தால் இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.

- Advertisement -

அதே காரணத்துக்காக கடந்த 2 வருடங்களாக பெரிய அளவில் வாய்ப்பு வழங்காமல் வெளியேம் விடாமல் பெஞ்சில் அமரவைத்த கொல்கத்தா அணி நிர்வாகம் அவரை ஒரு வேலைக்காரனை போல நடத்தியதாக சமீபத்தில் அவரின் பயிற்சியாளர் கபில் பாண்டே குற்றம் சாட்டியிருந்தார். அப்படிப்பட்ட நிலையில் இந்த வருடம் டெல்லிக்காக களமிறங்கிய முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை எடுத்து பார்முக்கு திரும்பிய அவர் இதுவரை மொத்தம் 6 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலர்களின் பட்டியலில் 2-வது இடம் பிடித்து அசத்தி வருகிறார்.

1. அத்துடன் இந்த வருடம் பங்கேற்ற 6 போட்டிகளில் 3 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ள அவர் தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் அவமானத்திற்கும் தனது சிறப்பான செயல்பாடுகளால் பதிலடி கொடுக்கும் வகையில் திருப்பி அடித்துள்ளார். இதில் ஆச்சரியம் என்னவெனில் இவர் ஆட்டநாயகன் விருதை வென்ற அந்த 3 போட்டிகளில் மட்டுமே இதுவரை டெல்லியும் வெற்றி பெற்றுள்ளது.

இதையும் படிங்க : எனக்கு முன்னாடி நீங்க இந்த முடிவை எடுப்பீங்கனு நான் நெனச்சி கூட பாக்கல – பொல்லார்டு குறித்து கெயில் பதிவு

2. அந்த அளவுக்கு முழு பார்முக்கு திரும்பியுள்ள குல்திப் யாதவ் தனது ஐபிஎல் கேரியரில் 2016 – 2020 வரை வெறும் ஒரு ஆட்டநாயகன் விருதை மட்டுமே வென்றிருந்தார். ஆனால் இப்போது 2022இல் வெறும் 6 போட்டிகளிலேயே 3 ஆட்டநாயகன் விருதை வென்று மும்முனை பார்முக்கு திரும்பியுள்ளது உண்மையாகவே அவரின் திறமையையும் அவமானத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற மனப்பான்மையும் காட்டுகிறது.

Advertisement