இந்திய அணியானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இந்த தொடரின் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்ததை அடுத்து இந்திய அணி பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் இரண்டாவது போட்டிக்கு முன்னதாக எந்த பிளேயிங் லெவனுடன் இறங்க வேண்டும் என்று கூட பலரும் விமர்சனங்கள் சொல்லும் அளவிற்கு இந்திய அணியின் தற்போதைய நிலை உள்ளது.
இந்நிலையில் கடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததற்கு காரணம் முகம்மது ஷமி தான் என்று இணையத்தின் வாயிலாக ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். மேலும் மத ரீதியாகவும் முகமது ஷமியை தாக்கி பேசியதால் முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது அதற்கு கண்டனம் தெரிவித்து தங்களது ஆதரவுகளை ஷமிக்கு கொடுத்தனர்.
இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடிக்க தற்போது முகமது ஷமிக்கு ஆதரவாக இந்திய அணி கேப்டன் விராத் கோலியும் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஒருவரை மதரீதியாக மோசமாக பேசுவது மனிதனின் கேவலமான செயலாகும். தனிப்பட்ட முறையில் நேரில் நின்று பேச தைரியம் இல்லாதவர்கள் தான் இது போன்ற சமூக வலைத் தளத்தை பயன்படுத்தி பேசுவார்கள்.
இதுபோன்ற முதுகெலும்பற்ற நபர்கள் வெட்கம் ஏதுமின்றி இதுபோன்ற செயல்களை செய்து வருகின்றனர் என்று கடுமையாக பேசியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய கோலி கூறுகையில் : அனைவருக்குமே கருத்து சுதந்திரம் என்பது உண்டு. அதனை சரியான விடயத்திற்கு பயன்படுத்த வேண்டும். இப்படி ஒருவரை மத ரீதியாக தாக்கி பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : இவரை மாதிரி ஒரு சாம்பியன் பிளேயரை ஏன் வெளிய உக்காரவச்சிருக்கீங்க – பிரெட் லீ ஓபன்டாக்
இந்திய அணிக்காக பல ஆண்டுகளாக சிறப்பாக பந்து வீசி வருபவர் ஷமி. அவரை குற்றம் சொல்லி பேசுபவர்களை நினைத்து ஒரு நொடி கூட நான் செலவிட விரும்பவில்லை. என்ன நடந்தாலும் ஷமிக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம் என கோலி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.