6 மாசத்துக்கு முன்னாடி அவர் செஞ்சு கொடுத்ததை மறக்காதீங்க.. பாபர் அசாமுக்கு லெஜெண்ட் கபில் தேவ் ஆதரவு

Kapil Dev
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் 9 போட்டிகளில் 4 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்து லீக் சுற்றுடன் வெளியேறியது. குறிப்பாக வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக இந்தியாவுக்கு எதிராக உலகக் கோப்பையில் தோற்ற அந்த அணி கத்துக்குட்டியான ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் அவமான தோல்வியை பதிவு செய்தது.

அந்த வகையில் 1992 போல கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி லீக் சுற்றுடன் வெளியேறினால் முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் ரசிகர்களும் பெரிய ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். இந்த தோல்விகளுக்கு பாபர் அசாம் கேப்டனாக முன்னின்று சிறப்பாக அணியை வழிநடத்து தவறியதும் பேட்டிங்கில் பெரிய ரன்கள் எடுக்காததும் முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

கபில் தேவ் ஆதரவு:
குறிப்பாக 2019க்குப்பின் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் 4 வருடங்கள் கழித்தும் இன்னும் முன்னேற்றத்தை காணாததால் பதவி விலக வேண்டும் என்று ஷாஹித் அப்ரிடி போன்ற நிறைய முன்னாள் வீரர்கள் விமர்சித்து இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போதைய தோல்வியால் பாபர் அசாமை பதவியிலிருந்து நீக்கலாம் என்று நினைப்பது தவறு என்று இந்திய ஜாம்பவான் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

மேலும் இதே பாபர் அசாம் தலைமையில் தான் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக பாகிஸ்தான் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்ததை மறக்க வேண்டாம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “தற்போதைய செயல்பாடுகளை மட்டுமே பார்த்து நீங்கள் கேப்டன்ஷிப் செய்வதற்கு பாபர் அசாம் தற்போது சரியானவர் அல்ல என்று சொல்கிறீர்கள்”

- Advertisement -

“இருப்பினும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக ஐசிசி தரவரிசையில் பாகிஸ்தானை நம்பர் ஒன் அணியாக முன்னேற்றினார். பொதுவாக ஒருவர் 0 ரன்களில் அவுட்டானால் 99% ரசிகர்கள் அவரை அணியிலிருந்து நீக்குவதற்கு விரும்புவார்கள். அதே சமயம் ஒரு சுமாரான வீரர் அபாரமான சதத்தை அடித்தால் அவரை அனைவரும் சூப்பர் ஸ்டார் என்று சொல்வார்கள். எனவே தற்போது இருக்கும் நிலைமையை பார்க்காதீர்கள்”

இதையும் படிங்க: எனக்கு தெரிஞ்சு இந்திய அணியில் இப்படி ஒன்ன பாத்ததில்ல.. 5 ஸ்பெஷல் இருக்கு.. நாசர் ஹுசைன் பாராட்டு

“மாறாக எப்படி அவர் இந்த விளையாட்டை அணுகுகிறார் என்றும் எவ்வளவு ஆர்வம் மற்றும் திறமையை கொண்டுள்ளார் என்பதை மட்டும் பாருங்கள்” என கூறினார். இந்த சூழ்நிலையில் பாபர் அசாம் தொடர்வாரா அல்லது கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்படுவாரா என்பதற்கான முடிவை பாகிஸ்தான் வாரியம் விரைவில் எடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இது போக பாகிஸ்தான் வீரர்களுக்கு கடந்த 5 மாதமாக சம்பளம் கொடுக்கவில்லை என்ற சர்ச்சையும் நிலவுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement