நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட் வாஷ் வெற்றியுடன் கைப்பற்றிய இந்தியா ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக முன்னேறி 2023 உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் வெற்றி நடை போடுகிறது. அதைத்தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி களமிறங்குகிறது. ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுக்கும் இத்தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் ஏற்கனவே தரவரிசையில் நம்பர் ஒன் டி20 அணியாக ஜொலிக்கும் இந்தியா சொந்த மண்ணில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தொடரின் முதல் போட்டி ஜனவரி 27ஆம் தேதியன்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறுகிறது. ராஞ்சி என்றதுமே முன்னாள் இந்திய ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி அவர்களின் பெயர் தான் பெரும்பாலான ரசிகர்கள் மற்றும் இந்திய வீரர்களுக்கே நினைவுக்கு வரும். ஏனெனில் 3 விதமான உலகக் கோப்பைகளை வென்று வரலாற்றில் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சாதனை படைத்த அவர் உலக வரைபடத்தில் ராஞ்சியின் அடையாளமாக திகழ்கிறார் என்றே சொல்லலாம். மேலும் பல சாதனைகளை படைத்த அவர் இந்திய அணியில் விளையாடும் நிறைய இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாகவும் திகழ்கிறார்.
யாருக்கும் பயப்பட மாட்டேன்:
அப்படிப்பட்ட நிலையில் அவரது ஊரில் நடைபெறும் இந்த போட்டிக்கான தற்போதைய இந்திய அணியில் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து இசான் கிசான் மட்டும் விளையாடுகிறார். இடது கை அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக விளையாடி வரும் அவர் சமீபத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதமடித்த வீரராக உலக சாதனை படைத்து நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வருகிறார். மேலும் தனது மாநிலத்தைச் சேர்ந்த தோனியை தனது குருவாக கொண்ட அவர் இரட்டை சதமடித்ததை விட 18 வயதில் தன்னுடைய பேட்டில் தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கியதே தமக்கு மிகவும் பிடித்த தருணம் என்று கூறியுள்ளார்.
அத்துடன் அவரது இடத்தை தம்மால் நிரப்ப முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள அவர் எதற்காகவும் யாருக்காகவும் பயப்பட மாட்டேன் என்று அதிரடியாகவும் தைரியமாக பேசியுள்ளார். இது பற்றி அணி நிர்வாகம் எடுத்த பேட்டியில் உங்களது ஜெர்சியின் பின்னணி கதையை சொல்லுமாறு கேட்டதற்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு. “நான் முதலில் 23 நம்பரை என்னுடைய ஜெர்சியில் கேட்டேன். ஆனால் அது ஏற்கனவே குல்தீப் யாதவ் பயன்படுத்தி விட்டதால் வேறு நம்பரை கேட்க்குமாறு என்னிடம் கூறினார்கள்”
“அப்போது எனது அம்மாவிடம் போன் செய்து உங்களுக்கு பிடித்த நம்பரை சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன 32 நம்பரை மறு வார்த்தை பேசாமல் எனது ஜெர்சியில் பயன்படுத்தி வருகிறேன்” என்று கூறினார். மேலும் தோனி பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒருமுறை எம்எஸ் தோனியிடம் நான் ஆட்டோகிராப் கேட்டேன். ஒரு வழியாக 18 வயதில் இருந்த போது அவரை முதல் முறையாக சந்தித்தது என்னால் எப்போதும் மறக்க முடியாது. அவருடைய கையெழுத்து என்னுடைய பேட்டில் இருப்பதற்கு மிகவும் பெருமைப்படுகிறேன்”
Secret behind jersey number 🤔
Getting the legendary @msdhoni's autograph ✍️
Favourite cuisine 🍱Get to know @ishankishan51 ahead of #INDvNZ T20I opener in Ranchi 👌🏻👌🏻#TeamIndia pic.twitter.com/neltBDKyiI
— BCCI (@BCCI) January 26, 2023
“நான் வளரும் போது என்னுடைய ரோல் மாடல் எம்எஸ் தோனி ஆவார். ஏனெனில் அவர் எங்கள் ஊரிலிருந்து எங்களது ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடியுள்ளார். எனவே இந்திய அணியில் அவரது இடத்தை நான் நிரப்ப விரும்புகிறேன். அதனால் தான் நான் இங்கு இருக்கிறேன். அவரைப் போலவே எனது அணிக்காக நான் நிறைய போட்டிகளை வெற்றி பெற்று கொடுக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.
இதையும் படிங்க: அம்பயர் விருது கொடுங்க – பாபர் அசாமை உயர்த்தி விராட் கோலியை கலாய்க்கும் பாக் ரசிகர்கள் – இந்திய ரசிகர்கள் பதிலடி
மேலும் எதற்காக நீங்கள் பயப்படுவீர்கள் என்று எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு. “நான் எதற்காகவும் பயப்பட மாட்டேன். எனது வழியில் வரும் அனைத்து சவாலுக்கும் நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறினார். மேலும் இந்தியாவுக்காக விளையாட 14 வயதில் முதல் முறையாக ஆசைப்பட்டதாக தெரிவிக்கும் அவர் அதற்காக பள்ளி அளவில் அண்டர்-19 அளவில் போராடி தற்போது இந்தியாவுக்காக விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.