2023 புத்தாண்டில் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் ஹர்திக் பாண்டியா தலைமையில் வென்ற இளம் இந்திய அணி அடுத்ததாக வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியது. அதில் முதலிரண்டு ஏற்கனவே அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று கோப்பையை கைப்பற்றிய இந்தியா ஜனவரி 15ஆம் தேதியன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற சம்பிரதாய கடைசி போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 390/5 ரன்கள் குவித்து மிரட்டியது.
95 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே அற்புதமான தொடக்கம் கொடுத்த கேப்டன் ரோகித் சர்மா 42 ரன்களிலும் சுப்மன் கில் சதமடித்து 116 ரன்களும் குவித்து அவுட்டானார்கள். அவர்களுக்குப் பின் ஷ்ரேயாஸ் ஐயர் 38, ராகுல் 7, சூரியகுமார் யாதவ் 4 என அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவட்டானார்கள். ஆனால் 3வது இடத்தில் களமிறங்கி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி இலங்கை பவுலர்களை வெளுத்து வாங்கிய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 13 பவுண்டரி 8 சிக்ஸர்களை பறக்க விட்டு ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 46வது சதத்தை விளாசி 166* ரன்கள் குவித்து அபார பினிஷிங் கொடுத்தார்.
உலக சாதனை வெற்றி:
அப்படி பந்து வீச்சிலேயே பாதி உடைந்த இலங்கை 392 என்ற பெரிய இலக்கை துரத்தும் போது ஆரம்பம் முதலே அனலாக பந்து வீசிய இந்திய பந்து வீச்சாளர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 22 ஓவர்களில் வெறும் 73 ரன்களுக்கு சுருண்டது. அவிஷ்கா பெர்ணாண்டோ 1, நுவனிடு பெர்னாண்டோ 19, குசால் மெண்டிஸ் 4, அசலங்கா 1, ஹசரங்கா 1, கருணரத்னே 1 என அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த இலங்கைக்கு கேப்டன் சனாக்காவும் 11 ரன்களில் அவுட்டாகி கைவிட்டார்.
அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் சாய்த்தனர். அதனால் 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் 300+ ரன்கள் வித்தியாசத்தில் வென்ற முதல் அணி மற்றும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி ஆகிய இரட்டை உலக சாதனைகளை படைத்து இந்திய ரசிகர்களை பெருமையடைய வைத்தது.
இதற்கு முன் கடந்த 2008 அபர்தீன் மைதானத்தில் அயர்லாந்துக்கு எதிராக நியூசிலாந்து 290 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய உலக சாதனையாகும். அத்துடன் இந்த வெற்றியையும் சேர்த்து இலங்கைக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா 96 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற ஆஸ்திரேலியாவின் சாதனையை தகர்த்துள்ள இந்தியா புதிய வரலாற்று உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 95 வெற்றிகளை பதிவு செய்துள்ளதே முந்தைய உலக சாதனையாகும்.
இதையும் படிங்க: அவர் அற்புதமான பேட்ஸ்மேன், இந்தியாவையும் கேப்டனாக அபாரமாக வழி நடத்துவார் – ஜிம்பாப்வே ஜாம்பவான் ஆண்டி ஃப்ளவர் பாராட்டு
அத்துடன் இப்போட்டியில் பந்து வீச்சில் அனலாக செயல்பட்ட இந்தியா இலங்கையை வெறும் 22 ஓவர்களுக்கு சுருட்டி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அதன் வாயிலாக இந்திய மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் எதிரணியை மிகவும் குறைந்த ஓவர்களுக்கு ஆல் அவுட்டாக்கிய அணி என்ற சாதனையும் இந்தியா படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. இலங்கை : 22 ஓவர்கள், இந்தியாவுக்கு எதிராக, 2023*
2. நியூசிலாந்து : 23.1 ஓவர்கள், இந்தியாவுக்கு எதிராக, 2001
3. கென்யா : 23.5 ஓவர்கள், நியூசிலாந்துக்கு எதிராக, 2011