நான் சொல்றது இந்தியர்களுக்கு கசக்கும்.. ஆனா இதான் உண்மை.. 2023 உ.கோ தோல்வி பற்றி கம்பீர் கருத்து

Gautam Gambhir
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா தங்களுடைய 6வது கோப்பையை வென்று உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. மறுபுறம் தொடர்ச்சியாக 10 வெற்றிகள் பெற்று மிகச்சிறப்பாக விளையாடிய இந்தியா ஃபைனலில் தோல்வியை சந்தித்தது. அதனால் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை இந்தியா தவற விட்டது பல கோடி ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.

அதை விட ஃபைனல் முன்பு வரை இவ்விரு அணிகளில் ஆஸ்திரேலியாவை விட இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டது என்றே சொல்லலாம். ஏனெனில் முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவை தோற்கடித்து நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து எதிரணிகளையும் லீக் சுற்றில் வீழ்த்திய இந்தியா செமி ஃபைனலில் காலம் காலமாக தோல்வியை பரிசளித்த நியூசிலாந்தையும் தோற்கடித்தது.

- Advertisement -

கம்பீர் கருத்து:
ஆனாலும் அழுத்தமான ஃபைனலில் பேட்டிங்கில் 240 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் ஆஸ்திரேலியா சிறந்த அணியாக ஃபைனலில் கோப்பையை வென்றதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று முகமது கைஃப் போன்ற சில முன்னாள் வீரர்களும் ஏரளாமான ரசிகர்களும் தெரிவித்திருந்தனர். குறிப்பாக தொடர் முழுவதும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்தியாவுக்கு ஃபைனல் மட்டும் மோசமாக அமைந்ததாக கைஃப் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியிருந்தாலும் ஃபைனலில் ஆஸ்திரேலியாவை விட இந்தியா சுமாராகவே விளையாடியது என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நிறைய பேர் இதை விரும்ப மாட்டார்கள். சில வல்லுனர்கள் இந்த உலகக்கோப்பையை சிறந்த அணி வெல்லவில்லை என்று சொன்னதை நான் கேட்டேன். அது முற்றிலும் உண்மையல்ல. அது நான் கேட்ட ஒரு வேடிக்கையான கருத்தாகும்”

- Advertisement -

“உண்மையாக சிறந்த அணி தான் இந்த உலகக் கோப்பையை வென்றது. இந்தியா தொடர்ச்சியாக 10 போட்டிகளை வென்று நல்ல ஃபார்மில் இருந்ததால் கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணியாக இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியா முதல் 2 போட்டிகளில் தோற்ற பின் 8 தொடர்ச்சியான போட்டிகளில் வென்றது. எனவே நீங்கள் 10 போட்டிகளில் வென்று 1 போட்டியில் சொதப்பிய இந்தியாவை சிறந்த அணி என்று மதிப்பிட முடியாது. உண்மை என்னவெனில் செமி ஃபைனல் மற்றும் ஃபைனலில் வெல்வதே முக்கியமாகும்”

இதையும் படிங்க: இந்தியா ஆஸ்திரேலியா டி20 தொடரிலிருந்து கடைசி நேரத்தில் விலகிய முக்கிய வீரர் – என்ன காரணம்?

“மாறாக லீக் சுற்றில் முதலிடம் அல்லது 4வது இடத்தை பிடிக்கிறீர்களா என்பது முக்கியமல்ல. குறிப்பாக நாக் அவுட்டில் சிறிய தவறு செய்தாலும் தோல்வி கிடைக்கும் என்ற சூழ்நிலையில் தொடர்ந்து 2 போட்டிகளில் வெல்வது கடினம். எனவே இந்தியா அதில் சிறப்பாக விளையாடவில்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்து ஓடாதீர்கள்” என்று கூறினார்.

Advertisement