இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது கடந்த ஜூலை 12-ஆம் தேதி டோமினிக்கா நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 150 ரன்களுக்கு சுருண்டது.
இந்திய அணி சார்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்சில் விளையாடி வரும் இந்திய அணியானது முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்த வேளையில் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்திலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
குறிப்பாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு ரன் குவிப்பில் ஈடுபட்டனர். நேரம் செல்ல செல்ல இருவரும் அரை சதம் கடந்தனர். அதன் பின்னரும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர்கள் அடுத்தடுத்து சதம் அடித்தும் அசத்தினர். இதனால் இந்திய அணி 200 ரன்களை கடந்து சென்றது.
அவ்வேளையில் 229 ரன்கள் எடுத்திருந்தபோது முதல் விக்கெட்டாக ரோகித் சர்மா 103 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு இப்படி 229 ரன்கள் குவித்தது பல்வேறு சாதனைகளுக்கு வழி வகுத்துள்ளது. இந்நிலையில் அவர்கள அடித்த இந்த 229 ரன்கள் மூலம் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு அசத்தலான சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.
அந்த சாதனை யாதெனில் : டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி முதல் இன்னிங்சின் போது விக்கெட் இழப்பின்றி முன்னிலை பெற்றுள்ளது இதுவே முதல்முறை. கடந்த 1978 ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி 131 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதலில் 97 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் தற்போது 150 ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் அணி எடுத்திருந்த வேளையில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி அந்த 150 ரன்கள் கடந்து முன்னிலை பெற்று முதல் முறையாக இந்த நிகழ்வை செய்து அதிசயத்தை நிகழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க : IND vs WI : இந்தியா அதுல கவனமா இருக்கனும், விராட் கோலி செஞ்சுரி அடிப்பது ரொம்ப கஷ்டம் – பிரக்யன் ஓஜா எச்சரிக்கும் காரணம் என்ன
நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் குவித்துள்ள வேலையில் 162 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.