இலங்கையில் நடைபெற்று வரும் நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த சூப்பர் போர் சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதி வருகின்றன. இந்த சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த சூப்பர் ஃபோர் சுற்றில் ஏற்கனவே இந்திய அணி பாகிஸ்தான அணியை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய வேளையில் அடுத்ததாக தற்போது இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் போட்டியில் விளையாடி வருகிறது.
அதன்படி கொழும்பு நகரில் செப்டம்பர் 12-ஆம் தேதி இன்று துவங்கிய இந்த போட்டியில் டாசியில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது இலங்கையின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 49.1 ஓவரில் 213 ரன்களை குவித்து அனைத்து விக்கெடுக்களையும் இழந்தது.
பின்னர் 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இலங்கை அணி சார்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் துனித் வெல்லாலகே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 20 வயதான இளம் வீரரான இவர் இந்திய அணியை சுருட்டி வீசியதை தொடர்ந்து அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்நிலையில் யார் இந்த துனித் வெல்லாலகே யார்? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோர் உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணியை கேப்டனாக வழி நடத்தியவர் இவர் தான் என்றும் அந்த தொடரில் 6 போட்டிகளில் விளையாடிய அவர் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி 44 ரன்கள் சராசரியுடன் 264 ரன்களை குவிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வெ.இ ஜாம்பவான்கள் க்ரீனிட்ஜ் – ஹெய்ன்ஸை இரட்டை குழல் துப்பாக்கியாக மிஞ்சிய விராட் – ரோஹித் ஜோடி, புதிய உலக சாதனை
ஆல்ரவுண்டரான இவரின் திறமையை அறிந்த இலங்கை அணி சர்வதேச கிரிக்கெட்டில் வெகுவிரைவாக கடந்த ஜூன் மாதமே இவருக்கு வாய்ப்பினை வழங்கியது. அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் அறிமுகமான முதல் போட்டியிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதோடு நடப்பு ஆசிய கோப்பையிலும் அவர் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவது அந்த அணிக்கு நம்பிக்கை தரும் விதமாக மாறி உள்ளது.