இந்தியாவுக்கு எதிரா இன்னும் இதை கூட செய்யல – இவர் என்னத்த நம்பர் ஒன் பேட்ஸ்மேனோ, பாபர் அசாம் மீது ரசிகர்கள் அதிருப்தி

Babar Azam 10
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான முக்கியமான போட்டியில் பாகிஸ்தான் 228 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இலங்கையின் கொழும்பு நகரில் செப்டம்பர் 10ஆம் தேதி துவங்கிய அந்த போட்டி மழையால் ரிசர்வ் நாள் வரை சென்ற நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சுப்மன் கில் 58, ரோகித் சர்மா 56, விராட் கோலி 122*, கேஎல் ராகுல் 111* என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் அதிரடியான ரன் குவிப்பால் 50 ஓவர்களில் 356/2 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது.

அதை தொடர்ந்து 357 என்ற மிகப்பெரிய இலக்கை சேசிங் செய்ய வேண்டிய அழுத்தத்தில் ஆரம்பம் முதலே இந்தியாவின் நேர்த்தியான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாத பாகிஸ்தான் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 32 ஓவரில் 128 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக பகார் ஜமான் 27 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

திண்டாடும் பாபர்:
அதன் வாயிலாக பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்த இந்தியா ஃபைனல் வாய்ப்பையும் 99% உறுதி செய்துள்ளது. மறுபுறம் மிகப்பெரிய தோல்வியை பதிவு செய்த பாகிஸ்தான் ஃபைனல் செல்வது மிகவும் கடினமாக மாறியுள்ளதற்கு கேப்டன் பாபர் அசாமின் சுமாரான பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்தது என்று சொல்லலாம்.

ஏனெனில் கடந்த சில வருடங்களாகவே 3 வகையான கிரிக்கெட்டிலும் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி பாகிஸ்தான் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் அவர் பெரிய ரன்களை துரத்த வேண்டிய இந்த போட்டியில் குறைந்தபட்சம் 50 முதல் 100 ரன்கள் அடித்தால் தான் இதர வீரர்களாலும் போராட முடியும் என்ற நிலைமையில் களமிறங்கினார். இருப்பினும் ஹர்திக் பாண்டியாவின் மேஜிக் நிறைந்த பந்தில் 10 ரன்களில் க்ளீன் போல்டான அவர் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

அதை விட ஐசிசி ஒருநாள் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருப்பதால் விராட் கோலியை விட சிறந்த வீரர் என்று பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் கொண்டாடி வரும் பாபர் அசாம் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 6 போட்டிகளில் வெறும் 168 ரன்களை 28 என்ற சராசரியில் எடுத்து சுமாராகவே செயல்பட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் அவர் இதுவரை இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு அரை சதம் கூட அடித்ததில்லை. அதிகபட்ச ஸ்கோர் 48 ஆகும்.

இதையும் படிங்க: IND vs PAK : 32 ஓவரில் 8 விக்கெட்டை மட்டுமே இழந்த பாகிஸ்தான் அணி ஆல் அவுட் என்று – அறிவிக்கப்பட என்ன காரணம்?

இது போக அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவுக்கு எதிராக 8, 46, 47, 9, 48*, 68*, 10, 14, 0, 10 என ஒருமுறை கூட 80 ரன்களை தாண்டாமல் 28 என்ற மோசமான சராசரியிலேயே அவர் பேட்டிங் செய்து வருகிறார். இதனால் இத்தனை வருடங்களாகியும் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை இவரெல்லாம் என்ன நமபர் ஒன் பேட்ஸ்மேன் என்று ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement