வீடியோ : கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா? இது எப்டி அவுட்டாகும் – பிக்பேஷ் தொடரில் மற்றுமொரு சர்ச்சையால் ரசிகர்கள் கோபம்

BBL Ultra Edge Snikco
- Advertisement -

ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற பிரீமியர் லீக் டி20 தொடரான பிக் பேஷ் தொடரின் 2022 – 23 சீசன் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ஜனவரி 6ஆம் தேதியன்று நடைபெற்ற 31வது லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் சிட்னி சிக்சர்ஸ் ஆகிய அணிகள் மோதின. உலக புகழ் பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய மெல்போர்ன் 20 ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு 173/5 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டாம் ரோஜர்ஸ் 48 (33), மார்கஸ் ஸ்டோய்னிஸ் 52 (28), கார்ட்ரைட் 36 (31) என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை அதிரடியாக எடுத்தனர்.

Bbl

- Advertisement -

சிட்னி சார்பில் அதிகபட்சமாக சீன் அபௌட் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதை தொடர்ந்து 174 ரன்களை துரத்திய சிட்னி அணிக்கு தொடக்க வீரர் ஜேம்ஸ் வின்ஸ் 9 பவுண்டரி 2 சிக்ஸரை பறக்க விட்டு 91* (59) ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் கடைசி ஓவரில் 6 விக்கெட் வித்யாசத்தில் போராடி வெற்றி பெற வைத்தார். அப்படி பரபரப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் 174 ரன்களை துரத்திய சிட்னி அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட போது ஜோர்டான் சில்க் 1 பவுண்டரி 1 சிக்சரை அடித்து 15 (10) ரன்களில் போராடி அவுட்டானார்.

தொடரும் அநியாயம்:
ஆனால் அவர் அவுட்டான விதம் தான் இது அனைவரையும் அதிருப்தியடைய வைத்துள்ளது. ஏனெனில் அந்த ஓவரை வீசிய லுக் வுட் 4வது பந்தை பவுன்சராக வீசினார். அதை அடிக்க சென்ற ஜோர்டான் சில்க் முடிந்த அளவுக்கு எகிறி குதித்தும் அடிக்க முடியாமல் தவற விட்டார். இருப்பினும் நேரத்தை வீணடிக்காமல் ரன் எடுக்க ஓடிய அவர் டைவ் அடித்து சிங்கிள் எடுக்க முயற்சித்தார். ஆனால் அதற்குள் பந்தை பிடித்த விக்கெட் கீப்பர் எதிர்ப்புறம் வீசி ரன் அவுட் செய்தார்.

அப்போது வழக்கம் போல களத்தில் இருந்த நடுவர் ரன் அவுட்டை சோதிப்பதற்காக 3வது நடுவரை அணுகிய போது எதிரணி கேப்டன் விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்ததாக கூறி ரிவ்யூ கேட்டார். எனவே இரண்டையும் சேர்ந்து சோதித்த 3வது நடுவர் முதலில் எட்ஜ் கொடுத்தாரா என்பதை ஸ்னிக்கோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆராய்ந்தார். அப்போது பந்து அவருடைய பேட்டை கடக்கும் போது ஸ்னிக்கோ மீட்டரில் ஸ்பைக் தெரிந்ததை மட்டும் ஆதாரமாக எடுத்துக் கொண்ட 3வது நடுவர் உடனடியாக அவுட் என்று அறிவித்தார்.

- Advertisement -

அதனால் ஏமாற்றமடைந்த ஜோர்டன் சில்க் பினிஷிங் செய்வதற்கு முன்பாகவே அதிருப்தியுடன் ஃபெவிலியன் நோக்கி திரும்பினார். ஆனால் அந்த இடத்தில் தான் மிகப்பெரிய தவறு அரங்கேறியதை வர்ணனையாளர்கள் உட்பட அந்த சமயத்தில் நேரலையில் யாருமே கவனிக்கவில்லை. ஏனெனில் அந்த தருணத்தை 3வது நடுவர் பக்கவாட்டு பகுதியிலிருந்து சோதிக்கும் போது பந்து பேட்டில் உரசுவது போல் தெரிந்தது. நடுவரும் அதை மட்டுமே பார்த்து அவுட் கொடுத்து விட்டார்.

ஆனால் நேரான கோணத்தில் இருந்து பார்க்கும் போது அவருடைய பேட்டுக்கும் பந்துக்கும் இடைவெளி இருந்தது அப்பட்டமாக தெரிந்தது. அதனால் இது எப்படி அவுட்டாகும் என்று ஆஸ்திரேலிய நடுவர்களை ஏராளமான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக திட்டி தீர்க்கிறார்கள். குறிப்பாக பந்துக்கும் பேட்டுக்கும் குறைந்தது 6 சென்டிமீட்டர் இடைவெளி இருப்பது இடது பக்க திரையில் தெளிவாக தெரிந்தும் அம்பையர் எப்படி இதை அவுட் கொடுத்தார்? என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: IND vs SL : டாஸ் வென்று ரிஸ்க்கான முடிவை கையிலெடுத்த கேப்டன் பாண்டியா – இது எங்க போயி முடியப்போகுதோ

அதே போல் நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீசம் வீரர்கள் தவறு செய்யும் போது அபராதம் விதிக்கப்படுவது போல இது போன்ற தவறுகளை செய்யும் நடுவர்களுக்கும் அபராதம் போடுங்கள் என்று விமர்சித்துள்ளார். பொதுவாக இந்திய அம்பையர்கள் தான் இது போன்ற குளறுபடிகளை செய்வார்கள் என்று பார்த்தால் ஆஸ்திரேலியாவில் உள்ளவர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று இந்திய ரசிகர்கள் காலாய்க்கிறார்கள்.

Advertisement