கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்கள் தங்களது நாட்டுக்காக சர்வதேச அளவில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுக் கொடுப்பதை முதல் இலக்காக வைத்திருப்பார்கள். அதுபோக அவர்களும் மனிதர்கள் என்ற நிலைமையில் தங்களது குடும்ப வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக வெறும் 2 மாதங்கள் விளையாடுவதற்கு கோடிகளை சம்பளமாக கொட்டிக் கொடுக்கும் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் ஒரு கட்டத்தில் அற்புதமாக செயல்படும் வீரர்களின் மவுசும் மதிப்பும் பன்மடங்கு உயர்வதால் அதற்கடுத்த வருடமே நடைபெறும் ஏலத்தில் அவர்களை வாங்குவதற்கு அனைத்து அணிகளும் கடும் போட்டியிடுகின்றன. அதன் முடிவில் ஒருசில வீரர்கள் 10 – 20 கோடி என்ற எதிர்பாராத தொகைக்கு வாங்கப்படுகிறார்கள்.
அந்த தருணம் நமது வாழ்வில் மிகப்பெரிய அதிர்ஷ்டம் ஐபிஎல் வாயிலாக தேடி வந்துள்ளதாக அந்த கிரிக்கெட் வீரர்கள் நினைக்கலாம். ஆனால் “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” என்பதுபோல் அந்த அதிர்ஷ்டமே ஆபத்தாக மாறுகிறது. ஆம் பெரிய தொகைக்கு வாங்கப்படும் கிரிக்கெட் வீரர்கள் அந்த சம்பளத்திற்கு எப்படி செயல்படப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்படுகிறது. அதனாலேயே இவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டுள்ள நாம் எப்படியாவது சிறப்பாக செயல்படே தீரவேண்டும் என்ற செயற்கையான தேவையற்ற அழுத்ததிற்கு அந்த கிரிக்கெட் வீரர்கள் உள்ளாகின்றனர்.
இஷான் கிசான்:
இறுதியில் அதுவே மிகப்பெரிய அழுத்தமாக மாறி களத்தில் விளையாடும்போது பதற்றமடைய வைத்து சுமாராக செயல்பட வைத்து அடுத்த வருட ஏலத்தில் அதே அணி நிர்வாகம் கழற்றி விடும் அளவுக்கு கொண்டு போய் சேர்க்கிறது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இளம் வீரர் இஷான் கிஷனை கூறலாம். ஆம் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர் கடந்த வருடங்களில் மும்பைக்காக அட்டகாசமாக பேட்டிங் செய்ததால் இந்தியாவுக்காக விளையாடும் அளவுக்கு வளர்ச்சி கண்ட அவரை மீண்டும் வாங்குவதற்கு கடும் போட்டியிட்ட மும்பை நிர்வாகம் 15.25 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கியது.
அதனால் கண்டிப்பாக சிறப்பாக செயல்பட்டாக வேண்டும் என்ற செயற்கையான அழுத்தத்துக்கு உள்ளான அவர் முதல் போட்டியில் 81* ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் பெற்றாலும் அதன்பின் பார்மை இழந்து டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடி சொற்ப ரன்களில் அவுட்டாகி சுமாராக செயல்பட்டு கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார். மொத்தம் 14 போட்டிகளில் 418 ரன்களை 32.15 என்ற சராசரியில் எடுத்தாலும் 120.11 என்ற ஸ்டிரைக் ரேட்டில் எடுத்த அவர் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு செயல்படவில்லை.
அதிர்ஷ்டமல்ல, ஆபத்து:
இத்தனைக்கும் இதைவிட இளம் வயதில் இதைவிட குறைந்த தொகையில் கடந்த 2020இல் 516 ரன்களை விளாசினார் என்பது இஷான் கிஷனை 15.25 கோடி என்ற தேவையற்ற அழுத்தம் தடுமாற வைத்ததை தெளிவாக புரிந்து கொள்ளலாம். இந்நிலையில் வரலாற்றில் இதுபோல பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட யுவராஜ் சிங் போன்ற நட்சத்திர வீரர்கள் கூட தடுமாறியுள்ளதாக முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார். பெரிய தொகை என்பது அதிர்ஷ்டமாக அமையாமல் அழுத்தத்தை ஏற்படுத்தும் ஆபத்தாக அமைவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “15 கோடி என்ற அழுத்தத்தால் இஷான் கிசான் தடுமாறினார். சில நேரங்களில் இதுபோன்ற ஜாக்பாட் அடிப்பது இதுபோன்ற ஆபத்தை கொடுக்கும். இவ்வளவு பெரிய பயணத்தை ஐபிஎல் ஏலத்தில் அவர் பெற்றது அவருக்கு நல்லது. மேலும் எந்த அணி நிர்வாகமும் ஒருவர் மீது அவ்வளவு பணத்தைக் கொட்ட முட்டாளாக இருக்காது. அந்த வீரர் அந்த அளவுக்கு தரமானவர் என்பதாலேயே இவ்வளவு செலவு செய்து அவரிடம் பெரியவற்றை அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் சில நேரங்களில் வீரர்கள் தான் அந்த அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள்”
“பெரிய பணத்தால் யுவராஜ்சிங் தடுமாறியதையும் பார்த்தோம். தினேஷ் கார்த்திக், பதான் சகோதரர்கள் தடுமாறியதையும் பார்த்தோம். அவர்கள் நிறைய பணத்தை பெற்றனர். ஆனால் சில நேரங்களில் நிறைய பணத்தை பெறுவது சில வீரர்களுக்கு அழுத்தத்தை கொடுத்து தடுமாற வைக்கிறது. அதேசமயம் சில இளம் வீரர்கள் அழுத்தத்தை உணராமல் பயமின்றியும் விளையாடுகிறார்கள்” என்று கூறினார்.
இதையும் படிங்க : IND vs RSA : டி20 தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ள இஷான் கிஷன் – எத்தனையாவது இடம் தெரியுமா?
அவர் கூறுவது போல் கடந்த 2014 ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக 14 கோடிக்கு வாங்கப்பட்ட தரமான யுவராஜ் சிங் எப்படி செயல்படப் போகிறார் என்று ஏற்பட்ட தேவையற்ற அழுத்தத்தால் 14 போட்டிகளில் வெறும் 376 ரன்கள் மட்டுமே எடுத்தார். அப்படி வரலாற்றில் பெரிய தொகைக்கு வீரர்களின் பட்டியலை புரட்டிப் பார்த்தால் தரமான 100க்கு 70% பேர் சுமாராகவே செயல்பட்டுள்ளார்கள்.