இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் காயம் காரணமாக இந்திய அணியில் நிரந்தர இடம் இல்லாமல் தவித்து வரும் வேளையில் அண்மையில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் மாற்றுவீரராக மீண்டும் அணியில் இடம் பிடித்தார். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் பங்கேற்ற அவர் தனது மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார்.
அதன் காரணமாக தொடர்ச்சியாக டி20 அணியில் இடம் பிடித்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5-ஆவது போட்டியின் போது அவரது தந்தையின் உடல்நிலை காரணமாக அணியிலிருந்து வெளியேறிய அவர் நேரடியாக மருத்துவமனைக்கு சென்றார்.
ஏனெனில் தீபக்சாஹரின் தந்தை மூளை பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அவருடன் இருக்க வேண்டியே அவர் அணியில் இருந்து வெளியேறி இருந்தார்.
அதனை தொடர்ந்து அடுத்ததாக இந்திய அணி தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க இருக்கிறது. அந்த தொடருக்கான இந்திய அணியிலும் தீபக் சாஹர் இடம் பிடித்திருந்தார். ஆனால் அவரது தந்தையின் இந்த நிலைமை காரணமாக அவர் இந்த தொடரில் பங்கேற்பாரா? மாட்டாரா? என்பது குறித்த சந்தேகம் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.
இந்நிலையில் அதற்கான விளக்கத்தை அவரே கொடுத்துள்ளார். அந்த வகையில் தீபக் சாகர் கூறியதாவது : தற்போது எனது தந்தை மருத்துவமனையில் இருக்கிறார். இந்த சமயத்தில் என்னால் அவரை விட்டுவிட்டு வர முடியாது எனது தந்தை எனக்கு மிகவும் முக்கியம். நான் இன்று ஒரு கிரிக்கெட் வீரராக இருக்க அவரே காரணம். அவரை இந்த நிலையில் விட்டு என்னால் எங்கும் செல்ல முடியாது. தற்போது எனது தந்தை ஆபத்து கட்டத்தை தாண்டி விட்டார்.
இதையும் படிங்க : பாண்டியாவின் இடத்திற்கு அந்த ஆப்கானிஸ்தான் வீரரை வாங்கலாம் – குஜராத் அணிக்கு ஐடியா குடுத்த இர்பான் பதான்
நான் ஏற்கனவே ராகுல் டிராவிட் சாரிடமும், தேர்வு குழுவினரிடமும் இந்த விவரங்களை தெரிவித்து விட்டேன். என்னுடைய தந்தை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினால் நான் அணியுடன் இணைவேன் என்று கூறியுள்ளார். இதன் காரணமாக அவர் இந்திய அணியில் இணைவது இன்னும் ஒரு சில நாட்களில் தெரியவரும். ஒருவேளை அவரது தந்தையின் உடல்நிலை அப்படியே இருக்குமாயின் அவர் டி20 தொடரில் இருந்து வெளியேறுவார் என்று தெரிகிறது.