- Advertisement -
ஐ.பி.எல்

53/5 என திணறல்.. துபே, தோனி கோல்டன் டக்.. பஞ்சாப்பிடம் மீண்டும் அடிபணிந்த சிஎஸ்கே? ரசிகர்கள் கவலை

ஐபிஎல் தொடரின் 2024 சீசனில் மே ஐந்தாம் தேதி மதியம் 3.30 மணிக்கு தரம்மசாலாவில் 53வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. கடந்த போட்டியில் சென்னையை தோற்கடித்த பஞ்சாப் இந்த போட்டியிலும் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் சென்னை பேட்டிங் செய்தது. ஆனால் அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே ரகானே 9 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் அசத்தலாக விளையாடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 32 (21) ரன்கள் எடுத்து அவுட்டானார்.

- Advertisement -

திணறிய சென்னை:
ஆனால் அடுத்ததாக வந்த சிவம் துபே கோல்டன் டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்தார். போதாகுறைக்கு அடுத்த சில ஓவரில் மறுபுறம் அதிரடியாக விளையாட முயற்சித்த டேரில் மிட்சேல் 30 (19) ரன்களில் அவுட்டானதால் 75/4 என சென்னை அணி தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த மொயின் அலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நிதானமாக விளையாட முயற்சித்தனர்.

ஆனால் அதில் திண்டாட்டமாக விளையாடிய மொயின் 17 (20) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்ததாக வந்த மிட்சேல் சான்ட்னரும் 11 (11) ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதனால் சென்னை 150 ரன்களாவது தாண்டுமா என்று ரசிகர்கள் கவலையடைந்தனர். அப்போது வந்த சர்துல் தாக்கூர் அதிரடியாக விளையாட முயற்சித்து 17 (11) ரன்களில் திரும்பினார்.

- Advertisement -

அதைத் தொடர்ந்து ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் வந்த எம் எஸ் தோனியும் கோல்டன் டக் அவுட்டாகி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார். குறிப்பாக வாழ்நாளில் முதல் முறையாக ஒரு டி20 போட்டியில் 9வது இடத்தில் களமிறங்கிய அவர் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை சந்தித்தார். அடுத்த ஓவரிலேயே மறுபுறம் முடிந்தளவுக்கு போராடிய ரவீந்திர ஜடேஜாவும் 43 (26) ரன்கள் குவித்து அவுட்டானார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி தடுமாறி 167/9 ரன்கள் எடுத்தது. குறிப்பாக 8 – 16 வரையிலான மிடில் ஓவர்களில் வெறும் 53 ரன்கள் மட்டுமே அடித்து 5 விக்கெட்டுகள் இழந்தது சென்னை அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ராகுல் சஹர், ஹர்ஷல் படேல் தலா 3, அர்ஷிதீப் சிங் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதையும் படிங்க: 10 டாஸ் தோத்தா என்ன? இதை சாதிச்சுருக்கேன்.. முஸ்தபிசூருக்கு பதிலாக அசத்தல் வீரரை கொண்டு வந்த ருதுராஜ்

இந்த வருடம் கொல்கத்தாவுக்கு எதிராக 262 ரன்களை சேசிங் செய்து உலக சாதனை படைத்த பஞ்சாப் கடந்த போட்டியில் சென்னையை தோற்கடித்து நல்ல ஃபார்மில் இருக்கிறது. எனவே இந்தப் போட்டியிலும் அந்த அணியை கட்டுப்படுத்துவது கடினம் என்பதால் 6வது தோல்வி கிடைத்து விடுமோ என்ற கவலையில் சிஎஸ்கே ரசிகர்கள் ஆழ்ந்துள்ளனர்.

- Advertisement -