- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவருக்கு மட்டுமில்ல.. மொத்த இந்திய அணிக்கு ஸ்கெட்ச் ரெடி பண்ணிட்டு இருக்கோம்.. பாபர் அசாம் பேட்டி

ஐசிசி உலகக் கோப்பை 2024 தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் வழக்கம் போல இம்முறையும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டிக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். கடைசியாக 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் மோதிய போது பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா 2 முறை வெற்றி கண்டது.

அதை விட ஆஸ்திரேலியாவில் கடைசியாக நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியின் மாஸ்டர் க்ளாஸ் ஆட்டத்தால் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றது. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் சேசிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா, சூரியகுமார் யாதவ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

இந்தியாவுக்கு ஸ்கெட்ச்:
அதனால் கண்டிப்பாக இந்தியா தோற்கும் என்று நினைத்த போது நங்கூரமாக விளையாடிய விராட் கோலி 82* ரன்கள் விளாசி அற்புதமான ஃபினிஷிங் கொடுத்தார். அந்த வகையில் 2012, 2016 வருடங்களைத் தொடர்ந்து 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 3வது முறையாக விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார். எனவே உலகக் கோப்பைகளில் சச்சினுக்கு பின் விராட் கோலி பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறார் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியை மட்டுமின்றி மொத்த இந்திய அணியை வீழ்த்துவதற்கு திட்டம் வகுத்து வருவதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா வென்ற 2011 உலகக் கோப்பையின் பயிற்சியாளர் இம்முறை தங்கள் பக்கம் இருப்பதை பலமாக கருதுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஒரு அணியாக நீங்கள் எப்போதும் பல்வேறு அணிகளுக்கு அவர்களுடைய பலத்தை வைத்து திட்டம் வகுப்பீர்கள். நாங்கள் எப்போதும் ஒரு வீரருக்கு எதிராக மட்டும் திட்டத்தை வகுப்பதில்லை. எதிரணியின் 11 வீரர்களுக்கும் திட்டங்களை தீட்டுவோம். இம்முறை நியூயார்க்கில் சூழ்நிலைகள் எப்படி இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது. எனவே அதை பார்த்து விட்டு நாங்கள் திட்டங்களை வகுப்போம்”

இதையும் படிங்க: எப்பா இவ்வளவு லட்சமா.. இந்தியாவை போன்ற எதிரணி தோற்கடிக்க இப்போதே பரிசுத் தொகையை அறிவித்த பாகிஸ்தான்

“விராட் கோலி சிறந்த வீரர்களில் ஒருவர். எனவே அவருக்கு எதிராகவும் திட்டத்தை உருவாக்குவோம். பாகிஸ்தான் வாரியம் கொடுத்த வேலையில் ஏற்கனவே கேரி கிர்ஸ்டன் வேலை செய்ய துவங்கியுள்ளார். விரைவில் அவர் எங்கள் அணியுடன் இணைந்து வேலை செய்ய உள்ளார்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து ஜூன் 9ஆம் தேதி வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்தியா – பாகிஸ்தான் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -