இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் இடம்பிடித்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் விளையாடிய தினேஷ் கார்த்திக் அதனைத் தொடர்ந்து மூன்று ஆண்டு காலமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார்.
ஆனால் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த அவர் தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இந்த டி20 தொடரில் மீண்டும் இடம் பிடித்து அசத்தலாக வருகிறார். அதோடு இந்திய அணிக்காக எதிர்வரும் இரண்டு உலகக் கோப்பை தொடர்களில் விளையாடி வெற்றி பெற வேண்டும் என்பதே தனது இலக்கு என்று கூறி கடினமாக உழைத்து வருகிறார் தினேஷ் கார்த்திக்.
தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் மிகச் சிறப்பாக பயன்படுத்தி வரும் அவர் முதல் மூன்று போட்டிகளிலும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் ராஜ்கோட் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 4வது டி20 போட்டியில் களமிறங்கிய கார்த்திக் 27 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் என 55 ரன்கள் குவித்து இந்திய அணியின் ரன் குவிப்புக்கு முக்கிய காரணமாக திகழ்ந்துள்ளார்.
தினேஷ் கார்த்திக்கின் இந்த அதிரடி காரணமாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்களை குவிக்க தற்போது 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாபிரிக்க அணி விளையாடி வருகிறது
இதையும் படிங்க : IND vs RSA : 4 ஆவது போட்டியில் மிகப்பெரிய சாதனையை தவறவிட்ட புவனேஷ்வர் குமார் – விவரம் இதோ
தினேஷ் கார்த்திக் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியில் திரும்பி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பி வந்த வேளையில் இன்று அவரது வேலையை மிகச் சிறப்பாக செய்துள்ளார். வழக்கமாகவே பினிஷிங் ரோலில் மிகச் சிறப்பாக செயல்படும் அவர் இன்றைய போட்டியில் தனது அதிரடியை நிரூபித்ததன் மூலம் நிச்சயம் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.