இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஏப்ரல் 24ஆம் தேதி தன்னுடைய 50வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். தன்னுடைய 16 வயது பிஞ்சு கால்களுடன் தனது 1989ஆம் ஆண்டு பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக இம்ரான் கான், வாசிம் அக்ரம் போன்ற அதிரடியான வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு முதல் போட்டியிலேயே தோற்க வேண்டிய இந்தியாவை டிரா செய்ய உதவிய அவர் ஆரம்ப காலங்களில் தடுமாறினாலும் குறுகிய காலத்திலேயே மிகச் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார்.
குறிப்பாக 90களில் நிறைய மேட்ச் வின்னர்கள் இல்லாமல் தடுமாறிய இந்தியா அவர் அடித்தால் தான் வெல்லும் என்ற நிலைமையில் இருந்ததை மறக்கவே முடியாது. அதனால் அவர் அவுட்டானதும் இந்தியாவில் ஆஃப் செய்யப்பட்ட தொலைக்காட்சிகளும் ஏராளமாகும். இருப்பினும் பெரும்பாலான போட்டிகளில் அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் உலகின் அனைத்து தரமான பவுலர்களையும் மிகச் சிறப்பாக எதிர்கொண்ட சச்சின் ரன் மெஷினாக 30000க்கும் மேற்பட்ட ரன்களை விளாசி இந்தியாவுக்கு நிறைய சரித்திர வெற்றிகள் பெற்றுக் கொடுத்தார்.
தலைகீழாக சேவாக்:
மேலும் ஓரிரு வருடங்கள் நிலைத்து ஓரிரு சதங்கள் அடிப்பதற்கு தடுமாறும் பல பேட்ஸ்மேன்களுக்கு மத்தியில் ஸ்டீவ் பக்னர் போன்ற தாறுமாறான அம்பயர்களை கடந்து 100 சதங்களை அடித்து மகத்தான சாதனை படைத்த அவர் காயம், ஃபார்ம் ஆகிய அனைத்தையும் கடந்து 24 வருடங்கள் இந்திய பேட்டிங்கை தம்முடைய தோள் மீது சுமந்தார். அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் குதிரை கொம்பாக பார்க்கப்பட்ட இரட்டை சதத்தை முதல் முறையாக அடித்து எப்படி அடிக்க வேண்டும் என்ற கலையை உலகிற்கு கற்றுக் கொடுத்த அவர் கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் கனவுகளை சுமந்து 1998 கோகோ கோலா கோப்பை முதல் 2011 உலகக் கோப்பை வரை பல மறக்க முடியாத வெற்றிகளை பெற்றுக்கொடுத்த மகத்தான பெருமைக்குரியவர்.
அதனால் இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக போற்றப்படும் அவர் 2013இல் ஓய்வு பெற்றாலும் அன்றும் இன்றும் என்றும் நாயகனாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். அப்படிப்பட்ட அவருக்கு ஏராளமான ரசிகர்களும் முன்னாள் இந்நாள் வீரர்களும் சமூக வலைதளங்களிலும் நேரிலும் தங்களது வாழ்த்து மழையை பொழிந்து வருகிறார்கள். அந்த வகையில் சச்சினுடன் பல போட்டியில் இணைந்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த முன்னாள் நட்சத்திர அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் தலைகீழாக நின்று 50வது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
களத்தில் பலமுறை சச்சின் கூறியதற்கு நேர் மாறாக செயல்பட்டதாக தெரிவிக்கும் சேவாக் இந்த 50வது பிறந்த நாளையும் அதே போல நேர்மாறாக தலைகீழாக நின்று அதாவது சிர்சாசனா யோகாசன முத்தரையுடன் வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் தலைகீழாக நின்று கொண்டே வாழ்த்தியது பின்வருமாறு. “மைதானத்தில் நீங்கள் என்னவெல்லாம் சொன்னீர்களோ அதற்கு நான் எதிராகவே செயல்பட்டுள்ளேன். அந்த வகையில் இன்று உங்களுடைய 50வது பிறந்த நாளில் நான் சிர்சாசனா செய்து வாழ்த்துகிறேன். உங்களுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சச்சின் பாஜி. நீங்கள் 100 வருடங்கள் வாழ வேண்டும். அந்த வருடத்தின் நாட்கள் ஒரு கோடியாக இருக்க வேண்டும்” என்று பாராட்டினார்.
Maidaan par jo aapne kaha , uska ulta hi kiya, toh aaj aapke iconic 50th birthday par toh aapko Shirshasana karke wish karna hi tha.
Wish you a very happy birthday @sachin_rt Paaji , aap jiyo hazaaron saal , Saal ke din ho ek crore. #HappyBirthdaySachin pic.twitter.com/awvckIAqc9
— Virender Sehwag (@virendersehwag) April 23, 2023
அதாவது பொதுவாகவே கிளாஸ் நிறைந்த பேட்டிங்கை வெளிப்படுத்தக்கூடிய சச்சின் டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட அதிரடியாக விளையாடும் சேவாக்கை சூழ்நிலைக்கு தகுந்தார் போல் பொறுமையுடன் விளையாடுமாறு அடிக்கடி கூறுவார். ஆனால் அதைக் கேட்காமல் தாம் எப்போதும் அதிரடியாக விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்ததாக நிறைய முறை சேவாக் பேட்டியில் தெரிவித்திருந்தார். அப்படி களத்தில் சொன்னதற்கு எதிராக செய்தது போல் இன்று தலைகீழாக நின்று வாழ்த்து தெரிவிப்பதாக சேவாக் மனதார பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க:CSK vs KKR : இதை விட பெஸ்ட் இனிமே தான் வர போகுது. கொல்கத்தாவை கதறவிட்ட – ஆட்டநாயகன் ரஹானே அதிரடி
மேலும் 2011 உலகக் கோப்பை உட்பட 93 ஒருநாள் போட்டிகளில் சச்சினுடன் இணைந்து ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடிய சேவாக் 3919 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடப்பட்டது.