ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்றத்தை சந்தித்த இந்தியா அடுத்ததாக நியூசிலாந்துக்கு பயணித்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று வருகிறது. கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுக்கும் இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கிய இளம் அணி மழைக்கு மத்தியில் சிறப்பாக செயல்பட்டு 1 – 0 என்ற கணக்கில் கோப்பையை வென்றது.
விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமலேயே நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியா தன்னை உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் அணி என்பதை நிரூபித்து 2024 டி20 உலக கோப்பைக்கான பயணத்தை வெற்றியுடன் துவங்கியது. அதை தொடர்ந்து நடைபெறும் 3 போட்டியில் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 25ஆம் தேதி துவங்குகிறது. அதில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கும் இந்தியா சமீப காலங்களில் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்தது போலவே இத்தொடரிலும் வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
ஸ்பெஷல் ரசிகர்:
மேலும் சொந்த மண்ணில் நடைபெறும் 2023 ஐசிசி 50 ஓவர் உலக கோப்பைக்கு தேவையான இளம் வீரர்கள் இத்தொடரிலிருந்து தேர்வு செய்யப்பட உள்ளதால் அனைத்து வீரர்களும் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்தியாவை வெற்றி பெற வைக்கப் போராடுவார்கள் என்று நம்பலாம். இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே ஆகிய அணிகளை விட எப்போதுமே சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் நியூசிலாந்து இந்த ஒருநாள் தொடரில் வென்று டி20 தொடரில் சந்தித்த தோல்விக்காக இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க தயாராகியுள்ளது.
குறிப்பாக கடைசியாக கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விராட் கோலி தலைமையிலான வலுவான இந்தியாவை ஒயிட் வாஷ் செய்த நியூசிலாந்து இம்முறையும் அதே போல சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அந்த சவாலை சமாளிப்பதற்காக முதல் போட்டி நடைபெறும் ஆக்லாந்து நகரில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியினர் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். பொதுவாகவே இந்திய அணியினர் களத்தில் விளையாட்டினாலும் பேருந்தில் பயணித்தாலும் எங்கே போனாலும் ரசிகர்கள் தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவு கொடுப்பது வழக்கமாகும்.
அந்த வகையில் இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினர் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் திவ்யான்ஸ் எனும் தீவிரமான இந்திய ரசிகர் அவர்களை நேரடியாக மைதானத்திற்கு சென்று பார்த்து ஆதரவு கொடுத்தார். இருப்பினும் மாற்றுத் திறனாளி ரசிகரான அவர் இதர ரசிகர்களைப் போல் ஆரவாரம் செய்து ஆதரவு கொடுக்க முடியவில்லை. அதனால அந்த சிறப்பு ரசிகர் தாங்கள் பயிற்சி செய்யும் போது ஆதரவு கொடுக்க வந்ததை அறிந்த இந்திய வீரர்கள் மிகவும் நெகிழ்ச்சியடைந்து நேரடியாக அவரது அருகே சென்று கை கொடுத்து புன்னகை முகத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
A moment to savour for #TeamIndia's super fan, Divyaansh after some memorable interactions in Auckland ahead of the #NZvIND ODI series 👏👏 pic.twitter.com/QopVaQCKDT
— BCCI (@BCCI) November 24, 2022
குறிப்பாக உம்ரான் மாலிக், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹர், ஷ்ரேயஸ் ஐயர், ஷார்துல் தாகூர், ரிஷப் பண்ட் என நட்சத்திர இந்திய வீரர்கள் அனைவரும் நேரடியாக அவரது அருகே சென்று அவருக்கு கை கொடுத்து அவருக்கு தகுந்தார் போல் குனிந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து சிரித்த முகத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
இதையும் படிங்க : முதல் ஒன்டே : அவர் மேட்ச் வின்னர்னு நிரூபிச்சுக்காரு, சாம்சன் – பண்ட் தேர்வில் டிகே ஆதரவு கொடுப்பது யாருக்கு
அதுபோக இதர வீரர்களும் பயிற்சிகளை முடித்த பின் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். இதை படம் பிடித்த பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதை பார்த்த இதர ரசிகர்கள் அந்த சிறப்பு ரசிகரின் வாழ்நாள் ஆசைகளில் ஒன்றை நிறைவேற்றி அவரது முகத்தில் புன்னகையை வர வழைத்து இந்திய அணி வீரர்களுக்கு மனதார நன்றி தெரிவித்து பாராட்டுகிறார்கள்.