வீடியோ : பார்க்காமலேயே பறக்கும் சிக்ஸர்கள், டி20 உ.கோ’யில் கழற்றி விட்ட தேர்வுக்குழுக்கு சஞ்சு சாம்சன் கொடுக்கும் பதிலடி

Sanju Samson
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்ற முடிந்த 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் சுமாராக செயல்பட்டு வெறும் கையுடன் வெளியேறிய இந்தியாவின் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் நாடு திரும்பியுள்ள நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டியில் கொண்ட டி20 தொடரில் களமிறங்குகிறது. அடுத்த டி20 உலக கோப்பைக்கு முன்பாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்கும் முயற்சியின் முதல் படியாக கருதப்படும் இத்தொடரில் ஏராளமான இளம் வீரர்கள் இடம் பிடித்துள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதையடுத்து நவம்பர் 18ஆம் தேதியன்று துவங்கும் இத்தொடரின் முதல் போட்டி வெலிங்டன் நகரில் இந்திய நேரப்படி 12 மணிக்கு நடைபெறுகிறது.

அப்போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே இத்தொடரில் முன்னிலை பெறுவதற்காக வெலிங்டன் நகரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியினர் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். குறிப்பாக இஷான் கிசான், ரிஷப் பண்ட் போன்ற இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்களது விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வலை பயிற்சிகளை செய்த நிலையில் நட்சத்திர இளம் வீரர் சஞ்சு நேரடியாக மைதானத்திற்கு சென்று பயிற்சிகளை செய்தார். நல்ல திறமையும் அனுபவமும் கொண்டுள்ள அவர் பெரிய சிக்ஸர்களை அடிப்பதிலும் வல்லவர் என்பதை ஐபிஎல் தொடரில் நிறைய முறை பார்த்துள்ளோம்.

- Advertisement -

பார்க்காமல் பறந்த சிக்ஸர்:
அதை பயிற்சியிலும் பின்பற்றிய அவர் அதிரடியான பேட்டிங் பயிற்சி எடுத்தார். குறிப்பாக ஒரு பந்தை வலுவாக அடித்ததால் அது உறுதியாக சிக்சர் செல்லும் என்று உணர்ந்த அவர் அதை பார்க்கவே இல்லை. ஆனால் அவரது இமாலய சிக்சரை பார்த்து வியந்த இதர வீரர்கள் “ஷாட் சஞ்சு” என்று கைதட்டி பாராட்டிய பின் எவ்வளவு தூரம் அந்த பந்து சென்று விழுந்தது என்று சஞ்சு சாம்சன் பார்த்தார். அவரைப் போலவே இதர வீரர்களும் தீவிரமான அதிரடி பயிற்சிகளை மேற்கொண்டனர்.

முன்னதாக கடந்த 2015இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானாலும் 2வது போட்டியை 4 வருடங்கள் கழித்து விளையாடிய கொடுமையை சந்தித்த சஞ்சு சாம்சனை 2021 வரை தேர்வு குழுவினரும் இந்திய அணி நிர்வாகமும் குப்பையை போல ஒரு வருடத்திற்கு ஒரு முறை 6 மாதத்திற்கு ஒரு முறை என்ற வகையில் பயன்படுத்தி தூக்கி எறிந்தார்கள். இருப்பினும் மனம் தளராமல் போராடி வரும் அவர் 2022 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஃபைனல் வரை அழைத்துச் சென்று பேட்டிங்கிலும் அசத்திய காரணத்தாலும் ரசிகர்கள் அதிகப்படியான ஆதரவை கொடுத்ததாலும் வேறு வழியின்றி தேர்வுக் குழு தேர்வு செய்தது.

- Advertisement -

அந்த வகையில் இந்த வருடம் சற்று நிறைய வாய்ப்புகளை பெற்ற சஞ்சு சாம்சன் பெரும்பாலான போட்டிகளில் அசத்தலாக செயல்பட்டும் டி20 உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட அணியில் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இடம் பெறவில்லை. ஆனால் மறுபுறம் அறிமுகமானது முதலே டி20 கிரிக்கெட்டில் சொதப்பலாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டதால் கொந்தளித்த ரசிகர்களின் கோபத்தை தணிக்கும் வகையில் சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய ஏ அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டார். அவரது தலைமையில் அசத்திய இந்தியா 3 – 0 என்ற கணக்கில் வைட் வாஷ் வெற்றியை பதிவு செய்தது.

அதன் காரணமாக அதன் பின் நடைபெற்ற தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ள அவர் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்தால் அசத்துவேன் என்பதை மீண்டும் மீண்டும் தேர்வுக் குழுவுக்கு நிரூபித்து பதிலடி கொடுத்து வருகிறார். அப்படி கடினமாகப் போராடி வந்துள்ள அவர் 2024 டி20 உலக கோப்பையில் தற்போது கூறப்படுவது போல் இளம் அணி விளையாடும் பட்சத்தில் நிச்சயமாக அதில் இடம் பிடிக்கும் அளவுக்கு வரும் காலங்களில் அசத்தலான செயல்பாடுகளை வெளிப்படுத்துவார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement