ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு இலங்கையில் இருக்கும் கொழும்பு நகரில் துவங்கியது. அதில் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் அசத்திய நடப்பு சாம்பியன் இலங்கையை முன்னாள் சாம்பியன் இந்தியா எதிர்கொண்டது. அந்த சூழ்நிலையில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் இந்திய அணியில் விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டனர்.
அத்துடன் காயத்தை சந்தித்த அக்சர் பட்டேலுக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய இலங்கை அணிக்கு ஆரம்பத்திலேயே மிகப்பெரிய சம்பவம் காத்திருந்தது என்று சொல்லலாம். ஏனெனில் ஜஸ்பிரித் பும்ரா வீசிய முதல் ஓவரிலேயே துவக்க வீரர் குசால் பெரேரா ஸ்விங்காகி வந்த 3வது பந்தை சரியாக கணிக்காமல் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுலிடம் எட்ஜ் வழங்கி டக் அவுட்டாகி சென்றார்.
ஒரே ஓவரில் மேஜிக்:
அதை விட முகமது சிராஜ் வீசிய 4வது ஓவரின் முதல் பந்தை தவறாக கணித்த பதும் நிசாங்கா 2 (4) ரன்களில் ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் வழங்கி அவுட்டானார். அதைத்தொடர்ந்து வந்த சமரவிக்ரமா 2வது பந்தில் தாக்குப் பிடித்தாலும் 3வது பந்தை உள்ளே எடுத்துச் சென்ற முகமது சிராஜ் 0 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் காலி செய்து பெவிலியன் திருப்பினார்.
அந்த நிலைமையில் வந்த கடந்த அசலங்காவையும் விட்டு வைக்காத முகமது சிராஜ் கோல்டன் டக் அவுட்டாக்கி பந்தில் அனலை பறக்க விட்டார். குறிப்பாக கடந்த போட்டியில் பாகிஸ்தானை கடைசி பந்தில் தோற்கடித்த அசலங்கா இம்முறை ஒரு பந்துக்கு மேல் தாக்கு பிடிக்க முடியாத அளவுக்கு சிராஜ் வேகத்தில் பெவிலியன் திரும்பி இலங்கைக்கு ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்ததாக வந்த தனஞ்செயா டீ சில்வா மாற்றிப் பந்தை தடுத்து நிறுத்தி பவுண்டரி அடித்தார்.
ஆனால் அவரையும் ஒரு பந்துக்கு மேல் விட்டு வைக்காத சிராஜ் கடைசி பந்தில் 4 (2) ரன்களில் அவுட்டாக்கி ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை சாய்த்து இலங்கையின் கதையை ஆரம்பத்திலேயே முடித்தார் என்று சொல்லலாம். அத்தோடு நிற்காத முகமது சிராஜ் தன்னுடைய அடுத்த ஓவரில் கேப்டன் தர்ஷன் சனாகாவையும் டக் அவுட் செய்து வெறும் 16 பந்துகளில் 5 விக்கெட்களை வீழ்த்தி மாஸ் காட்டி மொத்தமாக போட்டியை இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தார்.
W . W W 4 W! 🥵
Is there any stopping @mdsirajofficial?! 🤯The #TeamIndia bowlers are breathing 🔥
4️⃣ wickets in the over! A comeback on the cards for #SriLanka?Tune-in to #AsiaCupOnStar, LIVE NOW on Star Sports Network#INDvSL #Cricket pic.twitter.com/Lr7jWYzUnR
— Star Sports (@StarSportsIndia) September 17, 2023
அதனால் 10 ஓவரில் 31/6 என்ற துவக்கத்தை பெற்ற இலங்கை இந்த போட்டியில் 50 ரன்கள் தாண்டுமா என்ற கவலை அந்நாட்டு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. மறுபுறம் இந்த அபாரமான துவக்கத்தால் இந்தியா கிட்டத்தட்ட வெற்றி ஆரம்பத்திலேயே உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.