இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் இதுவரை பங்கேற்ற 13 போட்டிகளில் 9 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளது. கடந்த வருடம் தோற்றுவிக்கப்பட்டு அட்டகாசமாக செயல்பட்ட குஜராத் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு சென்று குவாலிபயர் 1 போட்டியிலும் வென்று நேரடியாக ஃபைனலில் கோப்பையை வென்றது போல் இம்முறையும் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க போராடி வருகிறது.
அந்த வரிசையில் ஹைதராபாத்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு தன்னுடைய முதல் ஐபிஎல் சதமடித்து 13 பவுண்டரி 1 சிக்சருடன் 101 (58) குவித்து முக்கிய பங்காற்றிய தொடக்க வீரர் சுமன் கில் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். சமீப காலங்களாகவே அசத்தலாக செயல்பட்டு வரும் அவர் கடந்த 3 மாதங்களுக்குள் வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக 3 வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்து சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரது வரிசையில் இந்திய கிரிக்கெட்டில் அடுத்த சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் பாராட்டும் அளவுக்கு அசத்தி வருகிறார்.
சுயநலமான இன்னிங்ஸ்:
மேலும் கடந்த வருடம் குஜராத் முதல் கோப்பையை வெல்வதற்கு 483 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய அவர் இந்த சீசனில் இதுவரை 13 போட்டிகளில் 576* ரன்களை விளாசி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். இருப்பினும் லக்னோவுக்கு எதிரான போட்டியில் 94 (51) ரன்களில் அவுட்டான அவர் இந்த போட்டியில் வழக்கம் போல அதிரடியாக செயல்பட்டு சாய் சுதர்சனுடன் இணைந்து 147 ரன்கள் சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமான தொடக்கத்தை கொடுத்தார்.
அதனால் நிச்சயமாக குஜராத் 200 ரன்களை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 89 ரன்கள் எடுத்த அவர் தன்னுடைய முதல் சதத்தை இம்முறை தவற விட்டு விடக்கூடாது எப்படியாவது அடிக்க வேண்டும் என்ற சுயநலமான எண்ணத்துடன் மெதுவாக விளையாடி அடுத்த 10 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து இறுதியில் 101 (58) ரன்களில் கடைசி ஓவரில் அவுட்டானார். மறுபுறம் அந்த சமயத்தில் அவர் சற்று மெதுவாக விளையாடியதால் 18, 19, 20 ஆகிய 3 ஓவர்களில் வெறும் 1 பவுண்டரி மட்டுமே அடித்த குஜராத் கடைசி ஓவரில் மட்டும் புவனேஸ்வர் குமாரின் அசத்தலான பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளை இழந்தது.
இருப்பினும் அந்தப் போட்டியில் வழக்கம் போல ஹைதராபாத் மோசமாக செயல்பட்ட காரணத்தால் குஜராத் எளிதாக வென்றது. ஒருவேளை தோற்றிருந்தால் அதற்கு நிச்சயமாக கடைசி நேரத்தில் சுப்மன் கில் மெதுவாக விளையாடிய காரணத்தாலும் இதர வீரர்கள் சொதப்பியதால் 200 ரன்களை எடுக்க தவறியதுமே காரணமாக அமைந்திருக்கும். இருப்பினும் அந்த சதத்தையும் அணிக்காகவே அடித்து வெற்றியில் பங்காற்றிய காரணத்தால் சுப்மன் கில்லை ரசிகர்கள் உட்பட யாரும் விமர்சிக்கவில்லை.
Ashish Nehra is highly angry that he is not listening to Hardik Pandya. This is Ashish Nehra for you.#GTvsSRH #SRHvsGT pic.twitter.com/X2zEZqzQrc
— Vikram (@MessiGOATMLS) May 15, 2023
ஆனாலும் 1 ரன்னில் வெற்றி கைமாறக்கூடிய டி20 கிரிக்கெட்டில் நல்ல துவக்கத்தை பெற்றும் கடைசி நேரத்தில் சொதப்பிய குஜராத் வீரர்கள் மீது அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ரா நேரடியாக திட்டவில்லை என்றாலும் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக சுப்மன் கில் சதமடித்த போது அனைத்து குஜராத் அணியினரும் கைதட்டிய நிலையில் அவர் மட்டும் “என்னய்யா இவர் இவ்வளவு சுயநலமாக விளையாடுகிறார்” என்ற வகையில் கோபத்துடன் அமர்ந்திருந்தார்.
இதையும் படிங்க: GT vs SRH : 2 ஆவது முறையா நாங்க பிளே ஆப்புக்கு செல்ல இவங்களே காரணம் – ஹார்டிக் பாண்டியா மகிழ்ச்சி
அதிலும் குறிப்பாக 200 வரவேண்டிய ஸ்கோர் 188 ரன்களுடன் நின்றதால் அதிருப்தியடைந்த அவர் பவுண்டரி எல்லையில் நின்று கொண்டு உச்சகட்ட கோபத்தை வெளிப்படுத்தினார். அப்போது சமாதானம் செய்ய முயன்ற கேப்டன் பாண்டியாவின் பேச்சுகளால் அமைதியாகாத அவர் கொந்தளிக்கும் வகையில் கோபப்பட்டார். மொத்தத்தில் பொதுவாகவே ஜாலியாக இருக்கக்கூடிய அவர் இந்த போட்டியில் கொந்தளித்தது ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது.