ENG vs RSA : இதுதான் பாஸ்பால் ஸ்கெட்ச்சா? படுதோல்வியால் இங்கிலாந்தை கலாய்த்து தள்ளும் முன்னாள் வீரர்கள்

ENG vs RSA Rabada
- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இந்த சுற்றுப்புறத்தில் முதலாவதாக நடந்த ஒருநாள் தொடரின் கோப்பையை இரு அணிகளும் 1 – 1 (3) என்ற கணக்கில் பகிர்ந்து கொண்ட நிலையில் அதன்பின் நடந்த டி20 தொடரை தென்னாப்பிரிக்கா 2 – 1 (3) என்ற கணக்கில் வென்றது. அந்த நிலைமையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 17ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது.

சமீபத்தில் புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் புதிய பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் ஆகியோரது தலைமையில் “பாஸ்பால்” எனப்படும் அதிரடியாக மட்டும் விளையாடும் யுக்தியை கையிலெடுத்து நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இங்கிலாந்து இந்த தொடரில் தென் ஆப்பிரிக்காவையும் தோற்கடிக்கும் என்று அந்நாட்டவர்கள் கூறினார்கள். குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் 3 நாட்கள் அபாரமாக செயல்பட்ட இந்தியாவை கடைசி நாளில் 378 ரன்களை அசால்டாக சேசிங் செய்து வென்ற இங்கிலாந்து எளிதாக வெல்லும் என்று வெளிப்படையாகக் கூறினார்கள்.

- Advertisement -

மிரட்டிய தென்ஆப்பிரிக்கா:
அந்த நிலைமையில் துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து ஜோ ரூட் 8, ஜானி பேர்ஸ்டோ 0, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 20 என முக்கிய வீரர்கள் அனைவரும் தென் ஆப்பிரிக்காவின் தெறிக்கவிடும் பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டானதால் வெறும் 165 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஓலி போப் 73 ரன்கள் எடுக்க மிரட்டலாக பந்துவீசிய தென் ஆப்ரிக்கா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக காகிசோ ரபாடா 5 விக்கெட்டுகளையும், அன்றிச் நோர்ட்ஜே 3 விக்கெட்டுகளையும், மார்கோ யான்சன் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு 85 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் டீன் எல்கர் 47 ரன்களில் அவுட்டாக அவருடன் அசத்தலாக செயல்பட்ட ஏர்வீ 73 ரன்கள் குவித்தார். மிடில் ஆர்டரில் பீட்டர்சன் 24, மார்க்ரம் 16, டுஷன் 19 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் மார்கோ யான்சென் 48 ரன்களும் கேசவ் மகாராஜ் 41 ரன்களும் குவித்து ஓரளவு காப்பாற்றியதால் தப்பிய தென்னாபிரிக்கா 326 ரன்கள் குவித்து அசத்தியது. இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

இங்கிலாந்து படுதோல்வி:
அதனால் 161 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அதிரடியாக பேட்டிங் செய்யும் என்று எதிர்பார்த்த அந்நாட்டு ரசிகர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் முதல் இன்னிங்சை விட பட்டைய கிளப்பும் வகையில் பந்து வீசிய தென்னாப்பிரிக்காவுக்கு பதில் சொல்ல முடியாமல் ஜோ ரூட் 6, ஜானி பேர்ஸ்டோ 18, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 20 என முக்கிய வீரர்கள் அனைவரும் மீண்டும் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.

அதனால் வெறும் 149 ரன்களுக்குச் சுருண்ட அந்த அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் சொந்த மண்ணில் படு மோசமான தோல்வியை சந்தித்தது. தென்ஆப்பிரிக்கா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அன்றிச் நோர்ட்ஜெ 3 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த வெற்றிக்கு மொத்தமாக 7 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய ரபாடா ஆட்டநாயகன் விருது பெற்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது.

- Advertisement -

கலாய்த்தெடுக்கும் ரசிகர்கள்:
முன்னதாக சொந்த மண்ணில் டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்தை 3 போட்டிகளிலும் 4வது இன்னிங்சில் வெற்றிகரமாக சேசிங் செய்ததால் பஸ்பால் எனப்படும் மெக்கல்லம் – ஸ்டோக்ஸ் அதிரடி பாதைக்கு உலகில் வேறு எந்த அணியும் ஈடு கொடுக்க முடியாது என்று அந்நாட்டு ரசிகர்கள் தம்பட்டம் அடித்தனர். அதைவிட சொந்த மண்ணில் ரோகித் சர்மா இல்லாத பும்ரா தலைமையிலான இந்தியாவை தோற்கடித்து தொடரை 2 – 2 (5) என சமன் செய்து விட்டு என்னமோ தொடரை வென்றது போல் இந்த உலகிற்கே டெஸ்ட் கிரிக்கெட் எப்படி விளையாட வேண்டும் என்று கற்றுக் கொடுக்கப்போவதாக பென் ஸ்டோக்ஸ் பகிரங்கமாக பேட்டி கொடுத்தார்.

அப்படிப்பட்ட நிலையில் இப்படி சொந்த மண்ணில் ஃப்ளாட்டான பிட்சில் ரூட், ஸ்டோக்ஸ் போன்ற தரமான வீரர்களை வைத்திருந்தும் தென் ஆப்பிரிக்காவிடம் படுதோல்வியை சந்தித்த இங்கிலாந்தை தற்போது முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கலாய்த்து வருகிறார்கள்.

இதையும் படிங்க : உங்களுக்கு கூட கோபம் வருமா? – டிராவிட் முதல் முறையாக கோபமடைந்த தருணத்தை பகிரும் பாக் வீரர்

குறிப்பாக 4வது இன்னிங்சில் தான் “பாஸ்பால்” வேலை செய்யும் ஆனால் 4வது இன்னிங்சில் விளையாட விடாமலேயே தென் ஆப்பிரிக்கா வென்று விட்டதாக முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் நேரடியாக கலாய்த்துள்ளார். அத்துடன் வெறும் மூன்றே நாளில் தோற்ற இங்கிலாந்து இதேபோல் இந்தியாவில் தோற்ற போது மோசமான பிட்ச் காரணம் எனக்கூறிய மைக்கேல் வாகன் எங்கே என இந்திய ரசிகர்கள் அவரை தேடிப்போய் கலாய்க்கிறார்கள்.

Advertisement