இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமான விடயம் தான் பெரியளவில் சுவாரஸ்யத்தை ஈர்த்த விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு 30 லட்சம் ரூபாய் என்கிற அடிப்படைத் தொகைக்கு ஏலத்தில் கலந்து கொண்ட அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 1 கோடியே 10 லட்ச ரூபாய் என்கிற பெரிய தொகை கொடுத்து அவரின் மீது நம்பிக்கை வைத்து ஏலத்தில் எடுத்தது. இருந்தாலும் மிக இளம்வயது வீரரான அவருக்கு இந்தத் தொடரிலேயே வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.
வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிவுரை வழங்கிய வீரேந்திர சேவாக் :
ஆனால் நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயமடைந்து வெளியேறியதால் லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது அவர் அறிமுகமாகி இருந்தார். அப்படி அறிமுகமான வைபவ் சூரியவன்ஷியும் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து பிரமாதமாக தனது கரியரை துவங்கியிருந்தார்.
அதுமட்டும் இன்றி அந்த போட்டியில் விரைவாக 34 ரன்கள் குவித்த அவரது பேட்டிங் பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றிருந்தது. அதோடு தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற ஆதரவும் குவிந்தன. இந்நிலையில் நேற்று ஆர்.சி.பி அணிக்கு எதிரான போட்டியிலும் விளையாடியிருந்த அவர் 12 பந்துகளில் 2 சிக்சர்களுடன் 16 ரன்களில் ஆட்டமிழந்து இருந்தாலும் அவரது சிக்ஸ் ஹிட்டிங் மற்றும் நேர்த்தியான ஷாட்டுகள் பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
எனவே அவருக்கு ராஜஸ்தான் அணி தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டுமென்றும் அவர் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாட வேண்டும் என்றும் பல்வேறு பிரபலங்களும் கூறி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷிக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
என்னை பொறுத்தவரை வைபவ் சூரியவன்ஷி இன்னும் 20 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும். விராட் கோலி தனது கரியரை 19 வயதில் ஐ.பி.எல் கரியரை துவங்கி தற்போது 18 ஆண்டுகள் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். அவரை போன்று வைபவ் சூர்யவன்ஷியும் மிகச் சிறப்பாக விளையாட வேண்டும். அதேபோன்று ஐபிஎல் போட்டிகள் மட்டுமே போதும் அதிலேயே கோடிகளில் சம்பாதிக்கலாம் என்று நினைத்தால் அது அவருக்கு பாதகமாக மாறிவிடும்.
இதையும் படிங்க : 4 ஆவது இந்திய வீரராக 43 வயதில் சாதனை நிகழ்த்த இருக்கும் சி.எஸ்.கே கேப்டன் தல தோனி – விவரம் இதோ
முதல் பந்திலேயே சிக்சர் அடித்த அவர் தன்னை ஸ்டார் என்று நினைத்துக் கொண்டால் அடுத்த ஆண்டே காணாமல் போய் விடுவார். எனவே எந்த ஒரு புகழையும் தலைக்கு ஏற்றிக் கொள்ளாமல் தன்னுடைய பேட்டிங் மீது மட்டும் கவனத்தை வைத்து தொடர்ச்சியாக விளையாடினால் அவரால் நிச்சயம் இன்னும் 20 ஆண்டுகள் விளையாட முடியும் என சூரியவன்ஷிக்கு சேவாக் அட்வைஸ் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



