இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அட்டகாசமான ஃபார்மில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை நடைபெற்றுள்ள 10 போட்டிகளிலும் பங்கேற்றுள்ள விராட் கோலி 3 சதம் மற்றும் 5 அரைசதம் என 101 ரன்கள் சராசரிடம் 711 ரன்களை குவித்துள்ளார். அதிலும் குறிப்பாக இறுதியாக நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கெதிரான அரையிறுதி போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி 50-ஆவது சதத்தை பூர்த்தி செய்து வரலாறு நிகழ்த்தியிருந்தார்.
அவரது இந்த பார்ம் இந்திய அணி இறுதிப் போட்டியிலும் வெல்வதற்கு உதவியாக இருக்கும் என்று ரசிகர்களும் அவரை வாழ்த்தி வருகின்றனர். தற்போது 35 வயதாகும் விராட் கோலி இன்றளவும் தனது பிட்னஸில் அதிகளவு கவனத்தை செலுத்தி வருகிறார். பிட்னஸில் இந்திய அணியின் கலாச்சாரத்தையே மாற்றிய விராட் கோலி மைதானத்தில் எவ்வளவு சுறுசுறுப்பான வீரர் என்பதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
அந்த அளவிற்கு தனது உடற்தகுதியின் மீது அதிக கவனத்தை எடுத்துக் கொள்ளும் விராட் கோலி கடினமான பயிற்சி மற்றும் செயல்பாடு என களத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கக்கூடிய ஒரு வீரர். இந்நிலையில் சமீப காலமாகவே விராட் கோலி கையில் ஒரு பிட்னஸ் பேண்டை அணிந்து விளையாடுவது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பேண்ட் எதற்காக அவர் கட்டியிருக்கிறார்? அதனுடைய விலை என்ன? அதனுடைய செயல்பாடு என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.
அந்த வகையில் அவர் கையில் கட்டி இருக்கும் அந்த பிட்னஸ் பேண்ட் அவருடைய எவ்வளவு நேரம் தூங்குகிறார்? இதயத்துடிப்பு எந்த அளவிற்கு இருக்கிறது? உடலின் வெப்பம் எந்த அளவிற்கு இருக்கிறது? எந்த அளவு ஆற்றல் அவருக்கு தீர்ந்துள்ளது? எவ்வளவு நேரத்தில் மீண்டும் இழந்த ஆற்றலை பெறலாம்? என்பது குறித்த பல்வேறு தகவல்களை மானிட்டர் செய்து தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதோடு அந்த பேண்டை கட்டிக்கொண்டு அவர் செயல்படும்போது அது துல்லியமாக அவரின் உடல்நிலை குறித்து அனைத்து தகவலையும் வெளிக்காட்டும் விதமாக இருக்கும். அதோடு உடலின் நீர்ச்சத்து எவ்வளவு இருக்கிறது? எவ்வளவு தூரம் ஓடிக் கடந்திருக்கிறோம்? எத்தனை அடிகள் நடந்திருக்கிறோம்? என்பது போன்ற பல்வேறு செயல்பாடுகளை கணக்கிடும் கருவியாக அந்த பிட்னஸ் பேண்ட் உள்ளது.
இதையும் படிங்க : ரசிகர்களே ஓட்டு போடுங்க.. 2023 உ.கோ தொடர் நாயகன் யார்? டாப் 7 வீரர்களை பரிந்துரைத்த ஐசிசி
அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட இந்த டிவைஸ் 40 நாடுகளில் தற்போது உபயோகத்தில் இருக்கிறது. அதோடு அந்த பிட்னஸ் பேண்ட் இன்னும் இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை. ஆனால் அதனை வெளிநாட்டில் இருந்து வாங்கி பயன்படுத்தலாம். அந்த வகையில் அந்த பிட்னஸ் பேண்டை பயன்படுத்த ஒரு ஆண்டுக்கு தற்போதைய இந்திய மதிப்பில் சுமார் 19,800 வசூலிக்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு 33,200 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. பல்வேறு விளையாட்டு துறையை சேர்ந்த பிரபலங்கள் பயன்படுத்தி வரும் இந்த பேண்டை தற்போது இந்திய அணியிலும் விராட் கோலி, முகமது சிராஜ் போன்ற ஒரு சில வீரர்கள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.